சாலையோரம் தூங்கிய போது கடத்தப்பட்ட குழந்தை... உடனடியாக மீட்ட போலீஸ் - வீடியோ
காரைக்குடி, செஞ்சையில் மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த போது குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. போலீசில் புகார் அளித்ததையடுத்து குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காரைக்குடி: சாலையில் வசித்து வரும் தம்பதியின் குழந்தையைக் கடத்தி சென்றவர்களிடம் இருந்து போலீசார் குழந்தையை உடனடியாக மீட்டு, தம்பதியிடம் ஒப்படைத்தனர்.
காரைக்குடி, செஞ்சைப் பகுதியை சேர்ந்தவர் அமீர். இவர் கண்ணாடி தொழில் செய்து வருகிறார். இரவு நேரத்தில் அங்குள்ள மரத்தடியில் குடும்பமாக படுத்து உறங்குவார்கள். அமீர் தம்பதிக்கு 6 மாதக் குழந்தை உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, அமீரிடம் ஒரு பெண்மணி வந்து, 'எனக்குக் குழந்தை இல்லை. என்னிடம் உங்கள் குழந்தையை தாருங்கள். நான் நல்லபடியாக வளர்த்துக் கொள்கிறேன்' என கூறியுள்ளார். அதற்கு அமீர் குழந்தையை தரும் எண்ணம் தங்களுக்கு இல்லை என கூறியுள்ளார்.
அடுத்த சில தினங்களிலேயே மரத்தடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது குழந்தை காணவில்லை. இதுகுறித்து காரைக்குடி போலீசாரிடம் அமீர் புகார் தெரிவித்தார். அதனையடுத்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடித்து அமீர் தம்பதியிடம் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் குழந்தையின்மை பல்வேறு சூழியல், உணவு, மரபுக் காரணங்களால் பெரும் பிரச்சனையாக உருவாகி வருகிறது. குழந்தையின்மையால் குழந்தையைக் கடத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இதை ஒரு சமூகப் பிரச்சனையாகக் கருதி தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications