திமுக - மதிமுக.. ஒளரங்கசீப், அசோகர் - இவர்களுக்குள் என்ன தொடர்பு?
சென்னை: அக்பரில் ஆரம்பித்த மொகலாய பேரரசு ஓளரங்கசீப் உடன் முடிந்து போனது. தற்போது திமுகவை மொகலாய பேரரசுடன் ஒப்பிட ஆரம்பித்துள்ளனர் சமூக வலைத்தளவாசிகள். அதே நேரத்தில் மௌரிய சாம்ராஜ்ய பேரரசர் அசோகரின் போரிடாமை நிலையை மதிமுக உடன் ஒப்பிட்டு சிலர் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.
மொகலாய மன்னரான ஷாஜகான் மும்தாஜ் தம்பதியரின் மூன்றாவது மகனாக பிறந்த ஔரங்கசீப் தனது சகோதரர்களை வீழ்த்திவிட்டு மன்னரானார்.92 வயதுவரை வாழ்ந்த அவர் கடைசி வரை அதிகாரத்தை விடாமல் கெட்டியாக பிடித்திருந்தார். இதுவே மொகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது. இதனை இன்றைய திமுக தலைவருடன் ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சௌமியன் வைத்தியநாதன் என்பரின் பதிவில், ஒளரங்கசீப்புக்குப் பின் முகலாய சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்தது என்று படித்திருப்போம், ஒளரங்கசீப்பின் காலம் வரைக்கும் வலுவாக இருந்த முகலாயர் சாம்ராஜ்ஜியம் திடீரென வீழ்ந்தது ஏன்?
92 வயது வரை வாழ்ந்த அவர் இறுதி வரைக்கும் அனைத்து விஷயங்களையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார், அரசின் நிர்வாகிகளாகட்டும் பிள்ளைகளாகட்டும் அவரிடம் பேசவே அஞ்சும் நிலை இருந்தது, அதனால் அடுத்தத் தலைமுறைக்கு நிர்வாகத்தில் போதிய அனுபவம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போனது, இதுவே ஒளரங்கசீப்புக்குப் பிறகு முகலாய சாம்ராஜ்ஜியம் திடீரென செல்வாக்கை இழக்க முக்கியக் காரணமாக அமைந்து போனது என்று கூறி அந்த பதிவை போட்ட Rajesh Dee என்பவருக்கு நன்றி என்று கூறியுள்ளார் சௌமியன். இதற்கு பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இது கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே சிலர் மோதலை ஏற்படுத்திவிட நடக்கும் முயற்சி என்றும், இதனை ஸ்டாலினே விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த ஓளரங்கசீப் உவமை பற்றிய பதிவுகளை ஸ்டாலினே விரும்பவில்லையாம். கடந்த ஞாயிறன்று கோபாலபுரம் சென்ற ஸ்டாலின், கருணாநிதியை சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தாராம். ஸ்டாலினே தேடி வந்து சந்தித்து பேசியதால் கடந்த சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்த கருணாநிதி, கூல் ஆகி விட்டதாகவும் கோபாலபுர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஔரங்கசீப் பதிவை போட்ட ராஜேஸ் டீ என்பவர் திராவிட சிந்தனையாளர். இவரே மதிமுகவின் நிலையை மௌரிய சாம்ராஜ்யத்துடன் ஒப்பிட்டு ஒருபதிவை போட்டுள்ளார்.
உலகம் போற்றும் மாமன்னன் அசோகன், அந்த அசோகச் சக்ரவர்த்திக்குப் பிறகு மவுரிய சாம்ராஜ்ஜியம் தடாலென வீழ்ந்தது ஏன்?
ஒரு மன்னனின் கடமை என்பது மதத்தைப் பரப்புவது அல்ல, அது மதவாதிகளின் வேலை, ஆனால் அசோகன் என்ன செய்தான்? இனி போர் புரிவதில்லை என முடிவெடுத்தான். ( தேர்தலில் போட்டியில்லை என ஒரு முறை முடிவெடுத்த போதே மதிமுக கலகலத்தது). அஹிம்சா கொள்கைக்கு மாறினான், புத்த மதத்திலே ஈடுபாடு கொண்டு அதைப் பரப்புவதிலே முழு கவனத்தையும் செலுத்தினான். இனி போர்புரிவதில்லை என்றான், போர்ப்பயிற்சியே இல்லாத நாட்டின் போர் வீரர்களின் திறமை எந்த நிலையில் இருக்கும்? அசோகனுக்குப் பிறகு மவுரிய சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தது.
காலங்காலமாக குறிப்பிட்ட நபர்களே வட்டாரப் பொறுப்புகளில் இருந்து கொண்டு ஆற்றல் மிக்கவர்களாகவே இருந்தாலும் மற்றவருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படாவிடின் அது கட்சியாகட்டும் நிறுவனமாகட்டும் பயிற்சி இல்லாதவர்கள் பொறுப்புக்கு வரும் போது அதன் நிலைமை என்னவாகும்? என்று கேட்டுள்ளார்.
இந்த பதிவு எதுமாதிரியான எதிர்வினையை கொண்டு வரப்போகிறதோ?