பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது கொ.மு.க.! அதிமுகவிற்கு ஆதரவு
கோவை: பாரதீய ஜனதா கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படாததையடுத்து, அந்த கூட்டணியில் இருந்து கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் வெளியேறியுள்ளது. வரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு நிலை எடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு என அறிவித்த கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு சீட் ஒதுக்குவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தையும் பா.ஜ.க. நடத்தவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த அக்கட்சி திங்கட்கிழமையன்று இது தொடர்பாக பொதுக்குழு கூட்டம் நடத்தி ஆலோசித்தது. அதில், தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அனைத்து அதிகாரமும் கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து கொ.மு.க. விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி இன்று மாலை அறிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெஸ்ட் ராமசாமி கூறியதாவது:
''கொங்குநாடு முன்னேற்ற கழகம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும். தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.
குறிப்பாக மேற்கு மண்டல பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்ய உள்ளோம். கோவையில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்தியில் அமையும் ஆட்சியில் தமிழகத்தில் இருந்து அதிகளவு உறுப்பினர்கள் கலந்து கொண்டால் மட்டுமே தமிழகத்துக்கான உரிமைகளை பெற முடியும். அந்த அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கிறோம். ஓரிரு தினங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவை தெரிவிக்க உள்ளோம்.
தேர்தலில் கொ.மு.க. போட்டியிடவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 6 வேட்பாளர்கள் விலக்கிக்கொள்ளப்படுகிறார்கள். கட்சியில் இருந்து பலர் பிரிந்து சென்று புதிய கட்சி துவங்கினாலும், கொ.மு.க.வின் 90 சதவீத வாக்கு அப்படியே உள்ளது" என்றார்.