கொடநாடு காவலாளி கொலை வழக்கில் 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கொடநாடு காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கு மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் பங்களா உள்ளது. இங்கு ஜெயலலிதா கோடை காலங்களில் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். தற்போது ஜெயலலிதா மறைந்த நிலையில் அதை அங்குள்ள பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அந்த எஸ்டேட்டுக்கு வந்த மர்ம நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்தனர். அப்போது அவர்களை பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் தடுக்க முயற்சித்தார். எனினும் அந்த நபர்கள் அவரை கொலை செய்து உள்ளே சென்று சில ஆவணங்கள், விலை மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அந்த கொலை மற்றும் கௌள்ளை வழக்கில் உதயம், தீபு, மனோஜ், சதீஷன், பீஜன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கடந்த ஜூன் 17-ஆ்ம தேதி அந்த 5 பேர் மீது நீலகிரி ஆட்சியர் இன்னோசன்ட் திவ்யா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஆட்சியரிடமும், காவல் துறை கண்காணிப்பாளரிடம் 5 பேரின் உறவினர்களும் மனு அளித்தனர். எனினும் அந்த மனுவுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து 5 பேரின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ராஜேஷ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 5 பேரின் உறவினர்கள் அளித்த மனு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications