நாங்க என்னய்யா செஞ்சோம்.. "மன்னார்குடியால்" படாத பாடுபடும் கூவத்தூர் பொதுமக்கள்!
கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களை மன்னார்குடி கோஷ்டி தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: ஆளுநர் ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்கும் வரைக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் சிறையில் இருந்துதான் ஆக வேண்டும். பெயருக்கு வேண்டுமானால் சொகுசு ரிசார்ட் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் இருப்பது சிறையில்தான்.
கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கத்தைத் தாண்டியுள்ளது கூவத்தூர். இந்த இடத்தில் சொகுசு ரிசார்ட் ஒன்று உள்ளது. இந்த ரிசார்ட்டை சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
சொகுசு ரிசார்ட்டில் 5 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களால் இந்தப் பகுதியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அடியாட்களின் கெடுபிடி
கூவத்தூர் முழுக்கவும் மன்னார்குடி அடியாட்களால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது. சொகுசு ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கும் வெளியுலகத்திற்கும் எந்தவித தொடர்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக குவிக்கப்பட்டுள்ள இந்த அடியாட்கள் கூவத்தூர் மக்களை மிரட்டி வருகின்றார்களாம். இந்த ஊரில் இருந்து யாரும் வெளியே செல்லவும் உள்ளே நுழையவும் பெரிய அளவில் கெடுபிடி காட்டி வருகின்றனர் என்று மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
போலீசார் குவிப்பு
தமிழ்நாட்டில் மொத்த எம்எல்ஏக்களும் இங்கு அடைக்கப்பட்டிருப்பதாலும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் இங்கு ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ரிசார்ட் உள்ள இடத்தில் இருந்து சுமார் 200 கி.மீ சுற்றளவிற்கு போலீசார் ஒரு மனித சங்கிலி போல் அணிவகுத்து நின்று அரண் அமைத்துள்ளனர். இதனால் மக்கள் இயல்பாக நடமாட அஞ்சுகின்றனர்.
வெளியே வந்தால்…
கிட்டத்தட்ட 500 குடும்பங்கள் இந்த ரிசார்ட்டை சுற்றி வசித்து வருகின்றனர். இவர்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கோ, அல்லது பெரியவர் வேலைகளுக்கு செல்வதற்கோ கூட முடியவில்லை. போலீசார் ஒரு புறமும், அடியாட்கள் ஒரு புறமும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று மக்களை மிரட்டி வருகின்றனர்.
இயல்புநிலை
அடியாட்கள், போலீசார் என இரண்டு தரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் இருந்து வருவதால், தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நேற்று கூவத்தூருக்கு சசிகலா சென்ற போது கூட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இந்தப் பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். இவர்களின் பதவி அதிகார ஆசைக்கு அப்பாவிகளான கூவத்தூர் மக்கள் பலியாக வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் இப்பகுதி மக்கள்.