ஒட்டப்பிடாரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தாவிட்டால் சுப்ரீம்கோர்ட் போவேன்... டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: ஒட்டப்பிடாரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தாவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவேன் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றது. அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை டாக்டர் கிருஷ்ணசாமி இழந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ் வெற்றி பெற்றார்.
இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒட்டப்பிடாரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும். கவர்னகிரி வாக்கு சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் உளவுத்துறையினர் ஆரம்பத்தில் இருந்தே என்னை கண்காணித்து வந்தனர். பணப்பட்டுவாடா செய்து எல்லா விதத்திலும் என் வெற்றியை தடுக்க அ.தி.மு.க. சூழ்ச்சி செய்தது.
அதனால் இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நடத்த வேண்டும். இல்லையென்றால் உச்சநீதிமன்றத்தை நாடுவேன்.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடையவும் இல்லை. அ.தி.மு.க. வெற்றி பெறவும் இல்லை. மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.