சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு: 21 பேருக்கு 3 ஆண்டு சிறை- 22 பேர் விடுவிப்பு
சென்னை: சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 43 பேரில் 21 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 22 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் சுவரொட்டி ஒட்டுவது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆயுதங்களுடன் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தை போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வெளியான மாணவர்களின் தாக்குதல் காட்சிகள் நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இது குறித்து அய்யாதுரை, சித்திரைச் செல்வன் அளித்த புகாரின் பேரில் 43 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை 17-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 21 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், வழக்குரைஞர் ரஜினிகாந்த் உட்பட 22 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications