பாபநாசம் மலையடிவாரத்தில் சிறுத்தை புலி நடமாட்டமா?: பீதியில் மக்கள்
நெல்லை: பாபநாசம் பொதிகை மலையடியில் ஆடுகளை சிறுத்தைகள் கடித்து குதறியதால் பொதுமக்கள் பீதயில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மான், மிளா, புலி உள்பட பல்வேறு காட்டு விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ளதால் விலங்குகள் இரை மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. குறிப்பாக மலையடிவாரப் பகுதிகளில் அவ்வப்போது இறங்கி வந்து அங்கு ஆடு, மாடு, நாய்களை கடித்துக் குதறி வருகின்றன.

இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் பொதிகையடி தெற்கு தெருவை சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற டிரைவர் ஆறுமுகம் என்பவரது வீட்டின் வெளியில் கட்டியிருந்த 2 ஆடுகளை சிறுத்தை கடித்துக் குதறியது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த ஆறுமுகம் வெளியில் வந்து பார்த்தார். அப்போது ஆடுகளை சிறுத்தை கடித்துக் குதறி கொண்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் சத்தம் போடவும் சிறுத்தை ஆடுகளை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தது. கடந்த மாதமும் இதே போன்று இந்த பகுதியில் நுழைந்த சிறுத்தை பலரது வீடுகளில் இருந்த நாய் மற்றும் தொழுவதத்தில் கட்டியிருந்த மாடுகளை கடித்துக் குதறியது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து சிறுத்தையை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். அதன் பிறகு சிறுத்தை ஊருக்குள் வராமல் இருந்தது.
தற்போது மீணடும் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் வனத்துறையினர் மீண்டும் களம் இறங்கி சிறுத்தையை விரட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு கலந்த பீதியுடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications