சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் - ஸ்டாலின்
சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தலில் வெற்றி, தோல்வி ஜனநாயகத்தில் உள்ள நடைமுறை என்றும் ஆளுங்கட்சியின் நிர்வாகத்தை கண்காணிக்கவே மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளதாகவும் சட்டசபையில் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 16ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனை அடுத்து நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் வருகிற 23ம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது.
17ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து, சட்டசபை கூட்டத்தொடர் திங்கட்கிழமை கூடியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, எம்.எல்.ஏ.க்களின் விவாதம் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.
மூன்றாம் நாளான இன்று சட்டசபையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், வெளிப்படையான நிர்வாகத்தை ஆளுங்கட்சி தர வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவதாக கூறினார்.
ஆளுங்கட்சியின் கொள்கை விளக்கமாக ஆளுநர் உரை இருக்க கூடாது என்பது மரபு என்று குறிப்பிட்ட அவர், ஆளுங்கட்சியின் நிர்வாகத்தை கண்காணிக்கவே மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். ஆளுங்கட்சி, எதிர்கட்சி இடையே வெற்றி வித்தியாசம் பெரிதாக இல்லையென்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.
வரலாற்று சிறப்பு மிக்க வகையில் திமுகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்தை மக்கள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்த ஸ்டாலின், வெளிப்படையான நிர்வாகத்தை ஆளுங்கட்சி தர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என கூறினார்.
சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த ஸ்டாலின், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது என்று அரசு தெரிவிக்கக் கூடாது என்று குறிப்பிட்டார். விவசாய கடன் தள்ளுபடி, தமிழை ஆட்சி மொழி, நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக மாற்ற முயற்சிப்பதை திமுக வரவேற்பதாகவும் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.