சேலத்தில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே. சுதீஷ் போட்டி?
சென்னை: பாரதிய ஜனதா தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் சேலம் லோக்சபா தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மச்சான் எல்.கே. சுதீஷ் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமது தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணியை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டது. கடந்த பல மாதங்களாக இந்த கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இன்னமும் தெளிவான நிலை எட்டப்படவில்லை.
பிடியே கொடுக்காமல் நழுவி வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த ஓரிருநாட்களாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்கு கேட்டு வருகிறார். இதன் மூலம் அக்கட்சி பாஜக அணியில் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாமகவுக்கு கோபம்
அதே நேரத்தில் தருமபுரிக்கு அன்புமணியை வேட்பாளராக அறிவித்து, கள்ளக்குறிச்சி எங்கள் கோட்டை என பிரகடனம் செய்து பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று அறிவித்து வருகிறது பா.ம.க. லோக்சபா தேர்தலில் பாமக போட்டியிடுவதாக அறிவித்த 10 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை தேமுதிக கேட்டதாலேயே அக்கட்சிக்கு கோபம் ஏற்பட்டது.
சேலத்துக்கு பஞ்சாயத்து
அதுவும் சேலம் தொகுதியை வாங்கிவிடுவதில் தேமுதிக மிகவும் அடம்பிடித்தது. ஆனால் சேலத்தில் பாஜக போட்டியிட்டால் விட்டுக் கொடுப்போமே தவிர தேமுதிகவுக்காக விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் பாமக உறுதியாக இருந்தது.
விலகியது பாமக?
இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் பாமக இடம்பெறாது என்றே கூறப்படுகிறது. அதனால் சேலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளரை களமிறக்குகிறது.
சேலத்தில் சுதீஷ்?
சேலம் லோக்சபா தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மச்சான் எல்.கே. சுதீஷ் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது. எல்.கே. சுதீஷும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வாக்கு கேட்பதற்கான முஸ்தீபுகளுடன் ஏராளமான புதிய புகைப்படங்களை வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியும் வருகிறார்.