''சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க''... நோட்டீஸ் அடித்துப் புலம்பிய 'அம்மா' தொகுதி 'ஏ.பி'!
ஸ்ரீரங்கம்: முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு உட்பட்ட திருப்பராய்த்துறை ஊராட்சியின் 7வது வார்டு உறுப்பினரான ஏபி என்கிற ஏ.பரமசிவன் வித்தியாசமான முறையில் ஒரு குறை கூறும் மனுவுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தநல்லூர் ஒன்றியம், திருப்பராய்த்துறை ஊராட்சியின் 7வது வார்டு உறுப்பினராக இருப்பவர் பரமசிவன். இவர் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனு நீதி நாள் நிகழ்ச்சிக்கு வந்தார். கையில் வித்தியாசமான ஒரு அச்சடிக்கப்பட்ட நோட்டீஸை வைத்திருந்தார்.
அதில் இடம் பெற்றிருந்த வாசகங்கள்...
ஏடி ஆபீஸில் மனு கொடுத்தும்
ஏண்டான்னு கூட கேட்கலை...
கலெக்டர் ஆபீஸில் மனு கொடுத்தும்
கண்டுக்கவே இல்லைங்க...
பிடிஓவுக்குகத் தகவல் போயும்
புரயோசனமே இல்லைங்க...
இனி எங்க போயி மனு கொடுக்க...
சொல்லுங்கண்ணே சொல்லுங்க...
ஏன் இப்படி ஒரு பிட் நோட்டீஸ் என்று அவரிடம் கேட்டால், எங்கள் ஊராட்சி மன்றத்தில் மாதம் மாதம் கூட்டம் நடைபெறுவது இல்லை. ஐந்து ஆறு மாதங்களுக்கு ஓரு முறை கூட்டம் போட்டு மொத்தமாக கையெழுத்து வாங்கி கொள்கிறார்கள்.
இது மட்டும் இல்லாமல் பஞ்சாயத்து நிதி, குடிநீர் இணைப்பு, பஞ்சாயத்து ஊழியர்கள் பம்ப் அரியர்ஸ் தொகை, 100 நாள் வேலை திட்டம், சுய உதவிக் குழு கட்டிடம் சோலார் விளக்குகள் இவை எல்லாவற் றிலும் முறை கேடு என்று பல முறை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முறையிட்டும் இது வரை நடவடிக்கை இல்லை. அதனால்தான் இப்படி எழுதி வந்தேன் என்றார்.