வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெறும்.. வானிலை மையம் வார்னிங்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: வங்கக்கடலி நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வடகிழக்குப் பருவ மழை கடந்த ஆண்டு இயல்பான அளவை விடவும் குறைவாகவே பெய்தது. இதனால் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே பல இடங்களில் நீர்நிலைகள் வற்ற தொடங்கிவிட்டன.
கடந்த சில நாட்களாக சென்னை, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன்காரணமாக பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
நீடிக்கும் காற்றழுத்தம்
இந்நிலையில் இலங்கை - கன்னியாகுமரி கடற்பகுதியில் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை - கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவு கடற்பகுதியில் நீடிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகப் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதால் ராமேஸ்வரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் லட்சத்தீவு பகுதிகளுக்கு 15 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு
குமரிக்கடல் மற்றும் தெற்கு கேரள கடல் பகுதியில இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் எதிர்பார்ப்பு
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 14-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெயில் காரணமாக வேதனையடைந்துள்ள மக்கள் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பெய்து வெப்பத்தை தணிக்குமா என எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.