சென்னை மயிலாப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து... ஆட்டோ டிரைவர் பலி... 5 லயோலா மாணவர்கள் கைது
சென்னை மயிலாப்பூர் அருகே மதுபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ டிரைவர் பலியானார். இதையடுத்து காரை ஓட்டிய லயோலா கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: மயிலாப்பூரில் கார் மோதி ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக லயோலா கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோக்களை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, அங்கிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில், அங்கிருந்த ஆட்டோக்கள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கியதில் கடுமையாக சேதமடைந்தன.
இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய ஆட்டோ ஓட்டுனர் ராஜேஷ் என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் காரை ஓட்டி வந்த 5 மாணவர்களும் காயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த அடையாறு போலீஸார் 5 மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காரை ஓட்டி வந்தது சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த நஷீத் அகமது என்பதும், அவருடன் வந்த ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் காரில் வந்த 5 பேருமே அளவுக்கு மீறிய மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்