கொங்குநாடு மக்கள் கழகத்துடன் பாஜக இன்று பேச்சு- மதிமுகவுடன் 23-ல் அதிகாரப்பூர்வ பேச்சு!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக கொங்குநாடு மக்கள் கழகத்துடன் இன்று பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்துகிறது. மதிமுகவுடன் வரும் 23-ந் தேதி அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்திருந்தார். மேலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாசிலாமணி, கணேசமூர்த்தி எம்.பி., இமயம் ஜெபராஜ், சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், டாக்டர் சதன் திருமலைக் குமார் ஆகிய கொண்ட ஐவர் குழுவை வைகோ அமைத்தும் இருந்தார்.
இந்த குழு வருகிற 23-ந்தேதி பாரதிய ஜனதா தலைவர்களுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சு வார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சு வார்த்தையில் பாரதிய ஜனதா சார்பில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன் ராஜுலு, ம.தி.மு.க. தரப்பில் வைகோ மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஈஸ்வரன் தலைமை யிலான கொங்குநாடு மக்கள் கழகத்துடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பாரதிய ஜனதா தரப்பில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த கே.என்.லட்சுமணன், சக்கரவர்த்தி, சரவணபெருமாள் ஆகிய மூவர் குழு அமைக்கப் பட்டுள்ளது.
இது குறித்து பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் முதல் கட்டமாக ம.தி.மு.க. மற்றும் கொங்குநாடு மக்கள் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் எங்கள் அணியில் இணையும் என்றார்.