ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார செலவு கட்சிக்கணக்கில்தான் வருமாமே?
சென்னை: விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தினசரி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஜெயலலிதா பிரசாரத்திற்கு சென்று வருவது அதிமுக கணக்கில் சேரும் என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அன்றைய தினமே, மார்ச் 3ம் தேதியில் இருந்து ஏப்ரல் 5ம் தேதி வரை 19 தொகுதிகளில் முதல் கட்ட பிரசாரத்துக்கான பட்டியலையும் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் ஜெயலலிதா.
சொன்னதோடு மட்டுமல்லாது கடந்த 3ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 தொகுதிகளுக்கு சென்று ஜெயலலிதா பிரசாரம் செய்துள்ளார்.
விமானம், ஹெலிகாப்டர்
இப்படி பிரசாரத்துக்கு செல்லும்போது, ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் அல்லது தனி விமானம் மூலம் மட்டுமே செல்கிறார். அங்கிருந்து காரில் முக்கிய இடங்களில் பிரச்சாரம் செய்து விட்டு அன்று மாலை6 மணிக்குள் சென்னைக்கு அதே தனி விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம் திரும்புகிறார்.
இதே நடைமுறையைத்தான் பிரசாரம் முழுவதும் கடைபிடிக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
வேட்பாளர் தேர்தல் செலவு
ஒரு எம்பி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அதிகப்பட்சமாக 70 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜெ. பிரச்சார செலவு
அதேசமயம் விமானம் அல்லது ஹெலிகாப்டரில் பிரசாரத்துக்கு செல்லும்போது ஒரு நாள் பயணத்துக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். இது வேட்பாளரின் கணக்கில் வருமா? என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
கட்சிக்கணக்கில் வரும்
அதற்கு பதில் சொன்ன பிரவீண்குமார், கட்சி தலைவர்கள் விமானம், ஹெலிகாப்டர் அல்லது கார் மூலம் பிரசாரத்துக்கு செல்வது வேட்பாளர்களின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அந்தந்த கட்சி கணக்கில்தான் சேரும் என்றார்.
கட்சிக்கு கணக்கு இல்லை
ஒரு கட்சி தேர்தலுக்காக இவ்வளவு பணம்தான் செலவு செய்ய வேண்டும் என்று எந்த வரைமுறையும் இல்லை. மற்றபடி அரசு விமானம், ஹெலிகாப்டர், கார்களைத்தான் கட்சி தலைவர்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.
தனியார் விமானம்
தனியார் விமானம், ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி உண்டு. கட்சி தலைவர் செல்லும்போது சாலைகளில் அவரது படம் போட்ட பேனர், கட்அவுட் வைக்க தடை விதிக்கப்படும். அரசு ஊழியர் அல்லது கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் முதல்வரை பிரசாரத்துக்காக செல்லும்போது சந்திக்கக் கூடாது.
வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர்
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மேடைகளில் வேட்பாளர்களின் பெயர்களை கட்சி தலைவர்கள் கூறினால், அந்த பொதுக்கூட்ட செலவு முழுவதும் வேட்பாளர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பிரவீண்குமார் கூறியுள்ளார்.