மருத்துவ மாணவர்களுக்கு துரோகம் செய்த தமிழக அரசு... ஸ்டாலின் பரபர குற்றச்சாட்டு!
மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : மருத்துவ கலந்தாய்வு நடக்குமா நடக்காதா என்ற சந்தேகத்தில் மாணவர்கள் இருப்பதாகவும் அரசு மாணவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தின் நடுவே செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வு நடக்குமா என்ற குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் மருத்துவப் படிப்புகளுக்கான 85 சதவீத இடஒதுக்கீட்டுப் பிரச்னையில் மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்து விட்டது.
கேள்வி நேரத்தில் அளிக்கப்படும் உறுதிமொழிகள், முதல்வர், அமைச்சர்கள் சட்டசபையில் வெளியிடும் அறிவிப்புகள் உறுதிக் குழுவிற்கு அனுப்பப்படுகிறது. அதேபோல 110 விதியின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகளை உறுதிக்குழுவுக்கு அனுப்ப கோரினோம். ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு முதல்வர் பழனிசாமி உரிய பதில் அளிக்கவில்லை.
தமிழகத்தின் தொழில்வளர்ச்சி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிருந்து பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளன. இது குறித்து அண்மையில் நடந்த அனைத்து மாநில அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம், அதற்கும் எந்த பதிலும் இல்லை.