கிணற்றில் போட்ட கல்லா இருப்பது தான் நிரந்தரமா முதல்வரே? ஸ்டாலின் விளாசல்!
கிணற்றில் போட்ட கல் போல கிடப்பது தான் நிரந்தரமா என தமிழக முதல்வரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : தமிழக மக்களுக்கு பலன் தாரத ஒரு ஆட்சியை முதல்வர் பழனிசாமி நடத்தி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசை கடுமையாக விமர்சித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிணற்றில் போட்ட கல் போல கிடப்பது தான் நிரந்தரமா?.கிணற்றில் போட்ட கல் போல அசைவின்றி, கடுகளவு கூட பயனில்லாமல் இருக்கும் அதிமுக அரசை தமிழக மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். மக்களுக்கு பலன் தராத ஒரு ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். விவசாயிகளின் நலன்களை புறக்கணிக்கும் ஆட்சிக்குப் பெயர் தான் மெஜாரிட்டி ஆட்சியா?. தமிழக பிரச்சினைகள் எதிலும் கவனம் செலுத்தாமல்,மத்திய அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் அரசை பினாமி அரசு என சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்.
கால்நடை சந்தை கட்டுப்பாட்டை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் சட்டம் இயற்றியது போல், தமிழக பேரவையில் சட்டம் இயற்றாதது ஏன்? மத்தியில் ஆளும் பாஜகவின் பினாமி அரசாக தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு மாறியிருக்கிறது. மேலும் ஜெயலலிதா நிர்வாகத்தில் ஆரம்பித்த சீரழிவு,ஓபிஸ்,பழனிசாமி ஆட்சியிலும் வளர்ந்தபடியே உள்ளது, நீட் தேர்விலிருந்து விலக்குகோரும் தீர்மானத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறமுடியவில்லை, என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.