திருவேற்காடு சிவன் கோயிலில் மாதவன் வழிபாடு... எம்.ஜி.ஆர். ஆசி பெற்ற 109 வயது முதியவரிடமும் ஆசி
திருவேற்காட்டில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்ற மாதவன் அங்கிருந்த 109 வயது முதியவரிடம் ஆசி பெற்றார். எம்ஜிஆர் முதல்வரானதும் அவரிடம் ஆசி பெற்றதை அந்த முதியவர் நினைவு கூர்ந்தாராம்.
சென்னை: தீபாவுக்கு உறுதுணையாக இருந்த மாதவன் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் நேற்று திருவேற்காட்டில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றபோது அங்கிருந்த 109 வயது முதியவரிடம் அவர் ஆசி பெற்றார்.
ஜெயலலிதா பிறந்த நாளன்று 24-ஆம் தேதி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கிய தீபா, அமைப்பின் கொடியையும் அன்றைய தினமே அறிமுகப்படுத்தினார்.
பின்னர் நிர்வாகிகள் தேர்வில் குளறுபடி, கணவரை ஆலோசிக்காமல் செயல்படுவது உள்ளிட்ட காரணங்களால் தீபாவின் கணவர் மாதவன் அமைப்பு விவகாரங்களில் தலையிடாமல் இருந்ததாக தெரிகிறது.
தீபா வீடு முற்றுகை
தீபா பேரவையில் அவரது நண்பர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் ஆவேசமடைந்து தீபாவின் வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் ராஜாவை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்தார்.
செயல்படவில்லை
அமைப்பு தொடங்கிய பின்னரும் கட்சியில் எவ்வித செயல்பாடுகளும் இல்லாமலும், பொதுமக்களை சந்திக்காமலும் இருந்தது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பேரவைக்கு தனது இலக்கு 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கு ரூ.10 வீதம் ரூ.7 லட்சத்தை பெற்றார்.
ஜெ.சமாதியில் மாதவன்
இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி இரவு ஜெயலலிதாவின் சமாதியில் மாதவன் சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நான் தனித்து கட்சி தொடங்க உள்ளேன். தீபா பேரவையில் தீய சக்திகள் ஊடுருவியுள்ளன. அவர்கள் தீபாவை தனித்து செயல்படவிடவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
திருவேற்காட்டில்...
இந்நிலையில் திருவேற்காடு சிவன் கோயிலுக்கு நேற்று வந்த அவர், அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்த 109 வயது முதியவரிடம் ஆசி பெற்றார். அப்போது எம்ஜிஆரை தமக்கு 8 வயது முதல் தெரியும் என்றும் அவர் முதல்வர் ஆனதும் தன்னிடம் வந்து ஆசி பெற்றதையும் அந்த முதியவர் நினைவுக்கூர்ந்தார்.
தீபா பேரவைக்கு வலுசேர்க்கவே...
பின்னர் மாதவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபா தொடங்கியது அமைப்பு மட்டுமே. அதற்கு வலுசேர்க்க நான் கட்சித் தொடங்கவுள்ளேன். இதன் மூலம் தீபாவை முதல்வர் ஆக்குவதே எனது கடமை என்றார் அவர்.