மர்ம மரணம்... மாணவி மோனிஷா உடலை மறுபிரேத பரிசோதனை நடத்த ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: விழுப்புரம் அருகே மர்மமாக மரணம் அடைந்த எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளில் மோனிஷாவின் உடலை மறுபிரேத பரிசோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் அருகே பங்காரத்தில் எஸ்.வி.எஸ். மருத்துவ கல்லூரியில் 3 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் மாணவிகள் மர்மமான முறையில் மரணமடைந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இவ்விவகாரத்தில் கல்லூரி தாளாளர் வாசுகி, அவருடைய கணவர் சுப்பிரமணியன், மகன் சுவாகித் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் கலாநிதி, சுவாகித்வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வாசுகி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்த மாணவிகளில் சரண்யா, பிரியங்கா ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மாணவி மோனிஷாவின் தந்தை தமிழரசன், மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; ஆகையால் மறுபிரேத பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரேஷ், மாணவி மோனிஷாவின் உடலை பாதுகாப்பாக வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மோனிஷாவின் உடலை மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
மாணவியின் தந்தைக்கே மகள் சாவில் சந்தேகம் இருப்பதால் மறுபிரேத பரிசோதனை நடத்தலாம் என்றும் அப்போது மாணவியின் தந்தை தமிழரசின் தரப்பில் ஒரு மருத்துவர் உடனிருக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.