விதிகளுக்கு புறம்பாக செயல்படும் குவாரிகளை மூட வேண்டும்... அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!
விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சென்னை : தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மணல் குவாரிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி, கரூர் பகுதிகளில் காவிரி கரைகளில் விதிகளுக்கு புறம்பாக மணல் அள்ளப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த வழக்கின் விசாரணை முழுவதுமாக நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் ராஜசேகர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் காவிரிப் படுகைகளில் மணல் எடுக்க அனுமதி அளித்துள்ளனர். மேலும் இதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை நீதிபதிகள் அளித்துள்ளனர். காவிரிக் கரையில் 1 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மணல் எடுக்க வேண்டும் ஆனால் 6 மீட்டர் ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. கிட்டதட்ட 100 சதவீத விதிமீறல்கள் நடந்திருப்பது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும் சில கட்டுப்பாடுகளுடன் காவிரிப் படுகைகளில் மணல் அள்ள பொதுப்பணித்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விதிகளுக்கு உட்பட்டே மணல் குவாரிகள் செயல்படுகின்றன என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும். மணல் குவாரிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை அரசு அளித்தது.
மணல் லாரிகளில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். ஒப்பந்த முறையில் மணல் வழங்கப்படுவதை தடுத்து, டெண்டர் முறையில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். காவிரிப்படுகையில் அதிக அளவில் மணல் அள்ளியதால் தண்ணீருக்குள் சென்ற தங்கள் மகன் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக திருச்சியை சேர்ந்த பெற்றோர் தொடர்ந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ. 26 லட்சம் வழங்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.