அவர் கொடுப்பார் என்று இவர் நழுவ.. இவர் தருவார் என அவர் நழுவ.. வெறும் கையுடன் திரும்பிய மாணவிகள்!
மதுரை: இப்படி இருந்தால் எப்படி.. மதுரை அரசு அதிகாரிகளைப் பார்த்து மக்கள் இப்படித்தான் எரிச்சலாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதில் மாணவ, மாணவியர் அடித்து நொறுக்கி மதிப்பெண்களைக் குவித்து குதூகலமாக தேறியிருந்தனர். முதலிடம் மட்டும் 41 பேருக்குக் கிடைத்திருந்தது.
இதில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசளித்துக் கெளரவிப்பார்கள். இது அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. ஆனால் மதுரையில் மட்டும் மகா குளறுபடி.
மதுரை மாநகர அளவில் முதலிடம் பிடித்த அற்புதச்செல்வி, ஐஸ்வர்யா, சிவானி ஆகிய மூவரையும் பாராட்டி பரிசு வழங்க மாநகராட்சி 21-ம் தேதி அழைத்திருந்தது. மாணவிகளும் தங்கள் பெற்றோர் சகிதம் மாநகராட்சிக்கு வந்தனர்.
ஆனால் மேயர் ராஜன் செல்லப்பாவோ, ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்குக் கிளம்பிப் போய் விட்டார். இதனால் மாநகராட்சி ஆணையரான கதிரவன் கையால் பரிசைக் கொடுக்கலாம் என்று கருதி அவரை அழைத்துள்ளனர்.
ஆனால் கதிரவனோ கடல் அளவு சோகத்தில் இருந்துள்ளார். அதாவது அவரது மகன் 10ம் வகுப்புத் தேர்வில் 460 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால் பெரும் சோகமாகக் காணப்பட்டாராம் அவர். எனக்கு மனசு சரியில்லை என்று கூறி விட்டு அவரும் ஒதுங்கிக் கொண்டார்.
ரைட்டு.. முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரனைக் கூப்பிட்டுப் பார்ப்போம் என்று முடிவு செய்து, அண்ணே, வாங்கண்ணே வந்து கொடுங்கண்ணே என்று கூப்பிட்டுள்ளனர். ஆனால் அவரோ ஜெர்க் ஆகி, மேயர் இல்லாதப்பா நான் எப்படிப்பா.. என்று பயந்து பதுங்கி ஓடி விட்டாராம்.
ஓகே. கலெக்டர் சுப்பிரமணிதான் கரெக்ட்டான நபர் என்று அவரிடம் ஓடியுள்ளனர். அவரோ, அதெல்லாம் மாநகராட்சி சம்பந்தப்பட்டது. நீங்களே பார்த்துக்கோங்க என்று கூறி விட்டாராம்.
கடைசியில் பரிசைக் கொடுக்க யாருமே முன்வராததால், இன்னொரு நாள் பார்க்கலாம், போய்ட்டு வாங்க என்று கூறி பரிசுக்காக மகா பொறுமையாக காத்திருந்த மாணவிகளையும், பெற்றோரையும் வீ்ட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனராம்.