சசிகலா புஷ்பா 2-வது திருமணத்துக்கு மதுரை கோர்ட் தடை!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பியின் 2வது திருமணத்திற்கு மதுரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Recommended Video

மதுரை : சசிகலா புஷ்பா எம்பி, ராமசாமியின் இரண்டாவது திருமணத்திற்கு மதுரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் திருமண விவகாரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை கீரைத்துறை மாகாளிப்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த சத்தியப்பிரியா என்பவருக்கும் டெல்லியைச் சேர்ந்த ராமசாமிக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடந்தது. பெண் குழந்தை பிறந்த பின்னர் ராமசாமி சத்தியப்பிரியாவிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் குடும்பத்தினர் மூன்று முறை சமாதானம் பேசியும் கடந்த 2 ஆண்டுகளாக சத்தியப்பிரியா தனது தந்தை வீட்டில் குழந்தையோடு வசித்து வருகிறார்.
ராமசாமி மீது சத்தியப்பிரியா 2017-ல் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது ராமசாமி சசிகலா புஷ்பா-வை திருமணம் செய்வதாக திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் உலா வந்தது. இது குறித்து சத்யப்பிரியா கணவரை தொடர்பு கொண்டு பேசிய போது மனைவிக்கே திருமண அழைப்பிதழை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக இருந்துள்ளார் ராமசாமி.

நீதிமன்றத்தில் முறையீடு
இதனால் ஆத்திரமடைந்த சத்யப்பிரியா மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் இரண்டு நாட்கள் முன்னர் புகார் அளித்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பா மற்றும் ராமசாமி திருமணம் குறித்து விளம்பரம் மற்றும் செய்தித்தாள்களில் வந்த பதிவினை சாட்சியாக கொண்டு மதுரை மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி வெங்கடராமனிடம் சத்யப்பிரியா முறையிட்டார்.

திருமணத்திற்கு தடை போட்ட நீதிமன்றம்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் 2வது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ராமசாமி சசிகலா புஷ்பா மட்டுமல்லாமல் எந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்ய கூடாது என்று தடை விதித்துள்ளார்.

விவாகரத்து வாங்கிய சசிகலா புஷ்பா
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 41 வயது சிகலா புஷ்பா அதிமுக சார்பில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா தன்னை அறைந்ததாக புகார் கூறிய நிலையில் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டு கட்சி சாரா எம்பியாக சசிகலா புஷ்பா இருக்கிறார். சசிகலா புஷ்பாவும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனும் டெல்லி துவாரகாவில் உள்ள குடும்ப நல கோர்ட்டு முதன்மை நீதிபதி பி.ஆர்.கேடியா முன்னிலையான அமர்வு முன்பாக பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.

டெல்லியில் திருமண ஏற்பாடுகள்
இதனையடுத்து சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் வருகிற 26-ந் தேதி மறுமணம் நடைபெறுவதாக பரபரப்பு தகவல் வெளியானது. இது தொடர்பான திருமண அழைப்பிதழ் ஒன்று முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் வலம் வந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications