இந்துசமய அறநிலையத்துறை மாஜி ஆணையர் தனபாலை கைது செய்ய மதுரை உயர்நீதிமன்றம் தடை
இந்துசமய அறநிலையத்துறை மாஜி ஆணையர் தனபாலை கைது செய்ய மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மதுரை : பழனி கோவிலில் சிலை செய்ததில் முறைகேடு செய்த வழக்கில், தேடப்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலைக் கைது செய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பழனி முருகன் கோவிவில் உள்ள பழமையான மூலவர் சிலைக்குப் பதிலாக புதிய சிலை அமைக்க 2004ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து புதிய சிலை செய்யப்பட்டது.
ஆனால், அந்த சிலை சில மாதங்களிலேயே நிறம் மாறியதையடுத்து, அது அகற்றப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த சிலை செய்யப்பட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதை14 ஆண்டுகளுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, சிலை செய்த ஸ்தபதி முத்தையா மற்றும் இணை ஆணையர் ராஜா ஆகியோர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அவர் ஆஜராகாததால், தலைமறைவாக உள்ள தனபாலை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தனபால் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ், போலீஸாரின் கைது நடவடிக்கைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.