திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு
திண்டுக்கல்: தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது படுகொலை வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இந்திரா, திண்டுக்கல்லில் உள்ளார். இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள இந்திரா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று நண்பகலில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. சிபிஐ அதிகாரிகளின் இந்த சோதனை நடவடிக்கை, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை
மதுரை சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்த ஜமால் முகமது ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் மாயமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.
அப்போது மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஜமால்முகமதுவை கொலை செய்ததாகக் கூறி, மேலூர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி சரண் அடைந்தார்.
கொடைக்கானலில் கொலை
இதுகுறித்த விசாரணையில் ஜெயில் ரோட்டில் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் உள்ளிட்ட சிலரது பெயரில் பதிவுசெய்து தர மறுத்ததால் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் மூலம் பாலியல் ஆசை காட்டி ஜமால் முகமதுவை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததைக் கண்டறிந்தனர்.
ஐ. பெரியசாமியின் குடும்பம்
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், இந்தக் கொலையின் பின்னணியில் ஐ.பெரியசாமியின் குடும்பத்துக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு அமைப்புகள் மதுரை ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயில் ரோட்டில் அலாவுதீன் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ள அந்த இடத்தின் 20 சென்ட் நிலத்தை ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா (35), உறவினர் பழனிவேலு(55), அவரது மனைவி உமாராணி(51) ஆகியோர் பெயரில் பதிவு செய்ய ஜமால்முகமதுவிடம் பத்திரத்தில் கையெழுத்து பெற்றிருந்தது தெரியவந்தது.
பெரியசாமி மகள் கைது
இதைத் தொடர்ந்து இவர்கள் மூவரையும் அழைத்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். அதில் ஜமால்முகமது கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருந்ததாக தெரியவந்ததால் மூவரையும் கைது செய்தனர். அதன்பின் இந்திரா, பழனிவேலு, உமாராணி ஆகியோரை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சிறையில் அடைப்பு
அப்போது ஜமால்முகமதுவின் நிலத்தை அடையும் நோக்கில் சட்டவிரோதமாக கூடுதல், கூட்டுசதி, கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திரா உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்திரா, உமாராணி ஆகியோர் திருச்சி மகளிர் சிறையிலும், பழனிவேலு மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப் பட்டனர்.
ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
இந்தநிலையில் ஐ.பெரியசாமி மகள் இந்திரா மற்றும் கணேசன் ஆகியோருக்கு ஹைகோர்ட் மதுரைக்கிளை கடந்த நவம்பர் மாதம் ஜாமீன் வழங்கியது. சென்னையில் சி.பி.ஐ அலுவலகத்தில் தினமும் கையெழுத்து போடவேண்டும் என அவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
சி.பி.ஐ ரெய்டு
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு தொடர்பாக ஐ.பெரியசாமி மகள் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications