முதல் வெற்றி.. சசிகலா குரூப் கதை முடியப் போகிறது.. மாஃபா பாண்டியராஜன்
சென்னை: தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் பதில் மனுவை ஏற்காமல் நிராகரித்ததன் மூலம் எங்களுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. விரைவில் அதிமுக எங்களுக்கே வந்து சேரும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரா சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளது ஓ.பி.எஸ். தரப்பு. இதையடுத்து சசிகலா தரப்புக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு சசிகலா பதில் அளிக்காமல் அவரால் திடீர் உப்புமா போல திடீர் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவரான டிடிவி தினகரன் பதில் அனுப்பியிருந்தார்.
இதை தூக்கிப் போட்டு விட்டது தேர்தல் ஆணையம். பதில் அனுப்ப தினகரன் யார், எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லாத அவர் எப்படி பதில் அனுப்ப முடியும். சசிகலாதான் பதில் அனுப்ப முடியும், அனுப்ப வேண்டும் என்று கறாராக கூறி விட்டது. இதுகுறித்து ஓ.பி.எஸ். தரப்பு உற்சாகமடைந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நீதிக்கு வெற்றி
இது நீதிக்கு கிடைத்த முதல் வெற்றி. இறுதி வெற்றிக்கு இது முதல் படி நிலை. டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு அடுத்த நாளே அவைத்தலைவர் மதுசூதனன், தினகரனின் மன்னிப்பு கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், அதனால் அவர் இன்னும் அ.தி.மு.க. உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றும் தெள்ள தெளிவாக அறிக்கை கொடுத்தார்.
விரைவில் இறுதித் தீர்ப்பு
அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் டி.டி.வி. தினகரன் துணை பொதுச்செயலாளராக கையெழுத்திட்டதை அங்கீகரிக்க இயலாது என்று தெரிவித்துவிட்டது. வெகுவிரைவில் தேர்தல் கமிஷன் இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்
பொதுச்செயலாளர் தேர்தலை தேர்தல் கமிஷன் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து இருக்கிறோம். அது ஏற்கப்படும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம்.
எங்களது கோரிக்கை நிறைவேறும்
தேர்தல் நடைபெறும் காலம் வரை அனைத்து முடிவுகளையும் அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து எடுக்க அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறோம். அதுவும் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். என்றார் பாண்டியராஜன்.