மேகி நூடுல்ஸ் மட்டும்தான் கெட்டதா யுவர் ஆனர்?
எங்கு பார்த்தாலும் மேகி... எதை பார்த்தாலும் மேகி... மேகி நூடுல்ஸ்ல விஷத்திற்கு சமமான கலப்பட பொருள் இருக்கு... அது உடலுக்கு நல்லதில்லை எனவே அதை தடை பண்றோம் என்று அசால்டாக ஒரு வாரத்தில் முடிவெடுத்துவிட்டது அரசாங்கம். ஆனால் இத்தனை நாட்களாக மேகி சத்தானது என்று வாங்கி சாப்பிட்ட மக்களுக்குத்தான் வயிற்றை கலக்குகிறது.
மேகிக்கு உத்தரபிரதேசத்தில் பிடிக்க ஆரம்பித்த சனி இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் சுற்றிச்சுழன்று தமிழ்நாடு வரை வந்து முடிந்துள்ளது. இன்று நேற்றல்ல கடந்த 10 ஆண்டுகளுக்கும் இந்திய குழந்தைகளுக்கு பிடித்த உணவுப்பொருட்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டது நூடுல்ஸ்.
டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போனாலே பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகள்தான். மாத மளிகை லிஸ்ட்டில் தவிர்க்க முடியாத இடம் பிடித்த பொருள் நூடுல்ஸ் என்றால் மிகையாகாது. இந்த நூடுல்ஸ் 2 நிமிடத்தில் தயாராகிவிடும் பொருள் என்பதால் அவசரத்திற்கு உதவும் என்று வாங்கி வைக்கின்றனர் இல்லத்தரசிகள்.
இதோ திடீரென்று நூடுல்ஸ்க்கு தடை விதித்து விட்டார்கள். இனி சமையல் அவ்ளோதானா என்பதுபோல சமூக வலைத்தளங்களில் கருத்துக்களும், மீம்ஸ்கள் பதியப்படுகின்றன. மேகி பாக்கெட்டுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.
தண்டனை கடுமையாகும்
மேகி நூடுல்சில் ரசாயனப் பொருட்கள் அதிகமாக இருப்பதாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், கலப்பட உணவுப்பொருள் தயாரிப்போருக்கு கடுமையான தண்டனை அளிக்க புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விளம்பரங்களில் நடிப்போருக்கு ஆயுள் தண்டனை அளிக்கவும் விதிகள் வகுக்கப்படும் என்றார்.
உணவுப்பொருட்களில் கலப்படம்
உணவுப் பொருட்களில் அளவுக்கதிகமாக ரசாயனப் பொருட்களை சேர்ப்பதை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேகி மட்டுமல்ல எத்தனையோ துரித உணவுகளில் கடுமையான விஷத்திற்கு ஒப்பான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. இது மனிதர்களை மெல்ல கொன்று வருகிறது. இது எத்தனை பேருக்கு தெரியும்?
பாலில் தொடங்கி
முன்பு, பால் பசு மாடுகளிடமிருந்து கறக்கப்பட்டது. இன்று தொழிற்சாலைகளில் பால் தயாரிக்கப்படுகிறது. 'ஸ்கிம்மிடு மில்க்' என்று சொல்லக் கூடிய பாக்கெட்டில் அடைத்து விற்கும் விலை அதிகமான பாலில் காஸ்டிக் சோடா, தண்ணீர், ரீபைன்ட் ஆயில், உப்பு, சர்க்கரை, யூரியா போன்றவை கலக்கப்படுகின்றன. பாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்து விட்டு, கொழுப்பு இருப்பது போல காட்ட, பாமாயில் கலந்து விடுகின்றனராம்!.
பால் கலப்படம்
பாலில் 69 சதவிகிதம் இருப்பது 1,791 மாதிரிகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த பாலை குடிப்பது பாதுகாப்பற்றது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாலும், முட்டையும்தான் ஆரோக்கியமானது என்று கூறுவார்கள். ஆனால் நம் நாட்டில் பாலும், முட்டையுமே பாதுகாப்பற்றதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முட்டைகளில் ஆபத்து
இதேபோல முட்டைகளிலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியா தாக்குதல் உள்ளது. கண்டறியப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலி, டேராடூன் நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 28% சதவிகித முட்டைகளில் ஈ கோலி பாக்டீரியாக்கள் தாக்கப்பட்டிருந்தன. இது வயிற்றுப்போக்கு, சிறுநீர் தொற்று நோய் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் 5 சதவிகித முட்டையில் சல்மோனில்லா பாக்டீரியா பாதிப்பின் தாக்குதல் இருந்தது கண்டறியப்பட்டது. இதேபோல கேரளாவின் கோட்டையம் பகுதியில் வாத்து முட்டைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சல்மோனில்லா பாக்டீரியா தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குளிர்பானங்களில் விஷம்
இந்திய நாடாளுமன்றத்தில் விற்க தடை செய்த குளிர்பானங்கள் இந்தியா முழுவதும் விற்கப்படுகின்றன. இதில், உயிரை கொல்லும் 40க்கும் மேற்பட்ட வீரியமுள்ள கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பீட்சாவில் என்ன இருக்கு?
பீட்சா என்ற துரித உணவு, வெளிநாட்டு உணவகங்களின் பெயரில் இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. அதில், அதிக சுவை மிகுந்த சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. இது நம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி பல நோய்களுக்கு வழியாக அமைந்துவிடுகிறது.
எண்ணெயில் கலப்படம்
மும்பையில் சில்லறையாக விற்பனை செய்யப்படும் 64% எண்ணெய்கள் கலப்படம் செய்யப்பட்டவை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்விற்காக கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி விதை எண்ணெய் மற்றும் சோயாபீன்ஸ் எண்ணெய் என 291 மாதிரிகளில் எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் உடலுக்கு தீங்கு தரக்கூடிய பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பயறு, பருப்புகள், காய்கறிகள்
இதேபோல நாம் அன்றாடம் உபயோகிக்கும், பயறுகள், பருப்புகள்,காய்கறிகள், கிழங்குகளிலும் ஆர்சனிக் அளவு அதிகமாக உள்ளது. மேலும் பழங்கள், கொட்டைகள், தயிர் ஆகியவற்றிலும் மனிதர்களை பாதிக்கும் விஷ உலோகங்கள் கலந்துள்ளதாக பரோடா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மேகி நூடுல்ஸ்
கடந்த ஒரு வார காலமாகவே மேகி நூடுல்ஸ் தலைப்புச்செய்திகளில் அதிகம் இடம் பெறுகிறது. இதில் அதிக அளவு காரியம் உள்ளது என்றும் இது சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல என்றும் எச்சரிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு ஏற்றதுதான் என்று நெஸ்லே நிறுவன அதிகாரி கூறிய சமாதானம் எதுவும் எடுபடவில்லை.
விளம்பரத்திற்கு கொட்டும் நெஸ்லே
மேகி நூடுல்ஸை தயாரிக்கும் ‘நெஸ்லே இந்தியா' நிறுவனம் விளம்பரத்துக்காக கடந்த ஆண்டு ரூ.445 கோடியை செலவிட்டுள்ளது. அதேநேரம் தரநிர்ணய சோதனைக்காக ரூ.19 கோடியை மட்டுமே செலவிட்டிருக்கிறது. அந்நிறுவன ஆண்டறிக்கை மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
சிக்கிய நூடுல்ஸ்கள்
காரீயம் விஷம் உடல் நலத்திற்கு அதிக தீங்கு தரக்கூடியது. உத்தரபிரதேசத்தில் தொடங்கிய தடை குஜராத், ஜம்மு காஷ்மீர் என பரவி தமிழ்நாடு வரை நீண்டது. மேகி நூடுல்ஸ் மட்டுமல்லாது வைவை எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், ஸ்மித் ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ், லெகாங்க் ஹக்கா நூடுல்ஸ் என பல நிறுவனங்களின் நூடுல்ஸ் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
காரியம் என்ன செய்யும்?
உணவுப் பொருட்களில் காரீயம் இருக்கும் போது உடலுக்கு அது போதுமான கேட்டை விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். காரீயம் உடலுக்குள் சுவாசம் வழியாகவோ, உணவுக்குழல் வழியாகவோ செல்லும் போது மூளை மற்றும் கிட்னியை பாதிக்கிறது. பெரியவர்களுக்கு இத்தகைய நோய்களை ஏற்படுத்தும் காரீயம், வளரும் நிலையில் உள்ள குழந்தைகளின் நரம்பு அமைப்பை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உள்ளூர் மசாலாக்கள்
இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள ஆயத்த உணவுப் பொருள்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்கள் நூடுல்ஸ் உடன் மசாலாவை தனி பொட்டலங்களில் வழங்குவதைப் போல, நாடு முழுவதிலும் ஹோட்டல்களிலும், தள்ளுவண்டிக் கடைகளிலும் பயன்படுத்தப்படும் காலிபிளவர் மசாலா, சில்லிசிக்கன் மசாலா பொட்டலங்கள் உள்ளூரில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் மசாலாக்களிலும் அவற்றிலும் காரீயம், அஜினோமோட்டோ அளவுக்கு அதிகமாக இருப்பதையும் இந்திய அரசும், மாநில அரசுகளும் உணர வேண்டும்.
மண்ணின் தன்மை
இத்தகைய மசாலா பொட்டலங்களையும் ஆய்வுக்கு உள்படுத்தி தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய மசாலாவைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை, நூடுல்ஸ் பயன்படுத்தும் இந்தியர்களைவிட அதிகம். எனவே இந்திய உணவு தானியங்களில் காரீயம் அளவு என்ன என்பது குறித்த ஆய்வும் இன்றியமையாதது. ரசாயன உரங்கள் மட்டுமன்றி, தானியங்களில் காரீயம் சேர நிலத்தின் தன்மையும் காரணமாகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
காய்கறிகளில் காரீயம்
டெல்லி மற்றும் நாக்பூர் மாநிலத்தில் கத்தரிக்காயிலும் மேற்கு வங்கத்தில், தக்காளி, பீன்ஸ் ஆகிய காய்கறிகளிலும் அளவுக்கு அதிகமான காரீயம் கலந்திருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல காரட்,பீட்ரூட், முட்டைக்கோஸ், முள்ளங்கி ஆகிய காய்கறிகளிலும் காரியம் கலந்துள்ளது ஆய்வில் தெரியவந்தது.
ருசிக்காக பார்த்து பார்த்து
பாக்கெட் உணவுப் பொருட்களிலும் துரித உணவகங்களிலும் ருசிக்காக உபயோகப்படுத்தப்படும் எம்.எஸ்.ஜி எனப்படும் மோனோசோடியம் குளுடாமேட் சேர்க்கப்படுகிறது. இந்த மோனோசோடியம் குளுடாமேட் ஒரு சுவை கூட்டி. இதற்கு அகில உலக சாப்பாட்டுப்பிரியர்களும் அடிமை.
சுவை தரும் பொருள்
குளுடாமேட் இயற்கையாகவே தக்காளி, சீஸ், உருளைக்கிழங்கு, மஸ்ரூம், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் காணப்படுகிறது. முதலில் கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது குளுடாமிக் அமிலம். அதைத்தான் முதலில் ஜப்பானில் சூப்களில் சுவை கூட்ட பயன்படுத்தினார்கள். பொதுவாக பாதுகாப்பான பொருள் பட்டியலில்" உப்பு, மிளகு, வினிகர் ஆகியவற்றுடன் மோனோசோடியம் குளுடாமேட்டும் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனிலும் மோனோசோடியம் குளுடாமேட்பாதுகாப்பான உணவுப்பட்டியலில் வருகிறது.
உயிருக்கு ஆபத்து
மேகி நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ள மோனோசோடியம் குளுடாமேட் ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். நியூரான்களைத் தூண்டி சுவையை அதிக அளவில்உணரச்செய்கிறது. ஆனால், அதே மோனோசோடியம் குளுடாமேட்மூளைத்திசுக்கள் இறக்கவும், அல்சிமீர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய்களை அதிகப்படுத்தவும் காரணமாலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அரசு கண்காணிக்குமா?
உணவுக் கலப்பட விவகாரத்தை இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் கொண்டு செல்ல வேண்டும். வெறுமனே நூடுல்ஸ் உடன் மட்டும் தேங்கி விடக்கூடாது. உணவுக் கலப்படம் குறித்தும், மக்களின் உடல்நலம் குறித்தும் அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், இந்தியாவில் தயாராகும் எல்லா உணவுப் பொருள்களிலும் எந்த அளவுக்கு வேதிப் பொருள்கள் இருக்கலாம் என்கின்ற அளவை மறுஆய்வுக்கு உட்படுத்தி, அளவை நிர்ணயிப்பதும், அதை நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றனவா என்பதைத் தொடர்ந்து கண்காணிப்பதும்தான் என்பது சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாகும்.