காவிரி விவகாரம் தொடர்பான பாமக பந்த்.. காஞ்சிபுரம், மயிலாடுதுறை, வேலூரில் ஆதரவு
காவிரி விவகாரம் தொடர்பான பாமக பந்த்த்துக்கு காஞ்சிபுரம், மயிலாடுதுறை, வேலூரில் ஆதரவு காணப்பட்டது
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பாமக விடுத்த பந்த் போராட்டத்துக்கு பல பகுதிகளில் ஆதரவு காணப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்ககோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 5-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் பா.ம.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

மதுராந்தகம் 100 சதவீதம்
ஊத்தங்கரையில் 100சதவீதம் முழு அடைப்பு நடைபெற்று வருகின்றன. அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிங்காரப்பேட்டை கல்லாவி காரப்பட்டு பகுதிகளிலும் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. இதேபோல, மதுராந்தகத்தில் 100 சதவீதம் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

2 ஆயிரம் கடைகள்
நாகை மாவட்டம் சீர்காழி,கொள்ளிடம்,வைத்தீஸ்வரன்கோவில்,பூம்புகார் முழுவதும் 2 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பாமகவினரின் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், மங்கநல்லூர் தரங்கம்பாடி திருக்கடையூர் சுற்று வட்டார பகுதிகளில் 6ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மர்மநபர்கள் கல்வீச்சு
திருவண்ணாமலை வந்தவாசியில் அரசுப்பேருந்து இயக்கப்படுவதை கண்டித்து மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் அரசுப்பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் வந்தவாசியில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

கைது
மத்திய அரசை கண்டித்து கரூரில் இருந்து சேலத்திற்கு சென்ற பயணிகள் ரயிலை மறித்து நாமக்கல் ரயில் நிலையத்தில் 100 க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். தருமபுரியில் 80% சதவீதம் கடைகள் அடைப்பு இந்த கடை அடைப்பு போராட்டத்தால் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. தருமபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியில் 4 பேருந்துகளின் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தன. இதனால் அந்த பகுதியே களேபரமாக காட்சியளித்தன.

வணிகர்கள் ஆதரவு இல்லை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக கடையடைப்பு போராட்டத்திற்கு கரூரில் வணிகர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. ஜவுளி கடை, நகை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளன். கரூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications