டெலிபோன் எக்சேஞ்ச் முறைகேடு - சிபிஐ நீதிமன்றத்தில் மாறன் சகோதர்கள் ஆஜர் - மே 22க்கு ஒத்திவைப்பு
பிஎஸ்என்என் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.
சென்னை: பிஎஸ்என்எல் டெலிபோன் எக்சேஞ்ச் முறைகேடு வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அவரது சகோதரரும் சன் குழு தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இருவரும் ஆஜரானதை அடுத்து மே 22ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதிமாறன். பதவியில் இருந்தபோது, 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளையும், 19 செல்போன் இணைப்புகளையும் (போஸ்ட் பெய்ட்) தனது போட் ஹவுஸ் இல்லத்தில் இருந்து முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தினார் என்றும் இதனால் அரசுக்கு ரூ. 440 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எஸ்.குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தயாநிதி மாறன்
மத்திய அமைச்சராக தயாநிதிமாறன் இருந்த போது அமைச்சர் என்ற முறையில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி எண் 24371515 சேவையை எம்.பி. ஒதுக்கீட்டுக்கானதாக மாற்றித் தரும்படி பிஎஸ்என்எல் தலைமை அதிகாரிக்கு அவர் கடிதம் அனுப்பினார்
முறைகேடாக இணைப்பு
தயாநிதி மாறன் குறிப்பிட்ட "2437' எனத் தொடங்கும் தொலைபேசி எண்ணுக்குரிய சேவை, சாதாரண பயன்பாட்டுக்கானதல்ல. அதனுடன் நூற்றுக்கணக்கான தொலைபேசி சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன' என்பது கண்டறியப்பட்டு, மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
சிபிஐ சோதனையில் உறுதி
சிபிஐக்கு வந்த புகார்களின் அடிப்படையில், தயாநிதி மாறனின் சென்னை போட் கிளப் வீட்டிலும், சன் டிவி அலுவலகத்திலும் 2007, செப்டம்பரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, "24371500' என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறன் பெயரில் அல்லாமல் "பிஎஸ்என்எல் பொது மேலாளர்-சென்னை தொலைபேசி இணைப்பகம்' என்ற பெயரில் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம், தயாநிதி மாறனின் வீட்டில் அப்போது தொலைபேசி எண் "24371515' பயன்பாட்டில் இருந்தது.
சன்டிவிக்க சட்டவிரோத இணைப்பு
24371515' என்ற எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் பற்றி சிபிஐ நடத்திய விசாரணையில், 2007, மார்ச் மாதத்தில் மட்டும் 48,72,027 யூனிட் தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்துக்காக மேற்கண்ட தொலைபேசி சேவை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது.
பூமிக்கு அடியில் இணைப்பு
நூற்றுக்கணக்கான இணைப்புகளைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகம் போன்ற வசதி, தயாநிதி மாறனின் போட் கிளப் இல்லத்தில் இருந்து தேனாம்பேட்டையில் இயங்கிய அவரது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவி அலுவலகம் வரை பூமிக்கு அடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் மூலம் இணைக்கப்பட்டது சிபிஐயின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.
சிபிஐ வழக்கு
இது குறித்து அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலருக்கு சிபிஐ அனுப்பிய கடிதம் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தப் பின்னணிதான் பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக தயாநிதி மாறன் மீது வழக்குத் தொடர முக்கிய காரணம். இதனால் அரசுக்கு ரூ.1.2 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2011ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
சிபிஐ கோர்டில் ஆஜர்
பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் தயாநிதி மாறன் மீதும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீதும் கடந்த ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சிபிஐ நீதிமன்றம், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகளுக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து இருவரும் இன்று ஆஜராகினர்.
வழக்கு மே 22க்கு ஒத்திவைப்பு
சென்னை சிபிஐ கூடுதல் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன், அவரது சகோதரும் சன்டிவி குழும தலைவருமான கலாநிதி மாறன், சன்டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி, தயாநிதிமாறனின் செயலாளர் கவுதமன், பிஎஸ்என்எல் அதிகாரிகள் பிரம்மநாதன், வேலுச்சாமி ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். இதனையடுத்து வழக்கு விசாரணையை மே 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.