பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும்: வைகோ
மதுரை: பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் ஆறு மாதங்களில் மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் கே.புதூரில் மதிமுக வின் 21-ஆவது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
அதில் வைகோ பங்கேற்றுப் பேசினார் அப்போது அவர், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கும் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று உறுதியளித்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஆறு மாதங்களில் மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கலிங்கபட்டியில் கொடியேற்றிய வைகோ
முன்னதாக மதிமுகவின் 21 ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, வைகோ அவர்கள் செவ்வாய் கிழமை, மாலை 5 மணி அளவில், தனது தாய் கிராமமான கலிங்கப்பட்டியில் மூன்று இடங்களில் கொடியேற்றினார். அதுபோது அங்கு திரண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
மதிமுகவினர் பங்கேற்பு
ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரணவன், மாவட்டத் துணைச் செயலாளர் மின்னல் முகமது அலி, கலிங்கப்பட்டி கிளைச் செயலாளர் சுப்பாராம் உள்ளிட்ட ஏராளமான மதிமுகவினரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
கோவையில் கொண்டாட்டம்
ம.தி.மு.க., கட்சியின் 21ம் ஆண்டு துவக்கவிழா ஒட்டி கோவை மாநகர பகுதிகளில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பீளமேடு, சிங்காநல்லூர், காந்திபுரம், வேலாண்டிப்பாளையம், செல்வபுரம் போன்ற பகுதிகளில் வாழும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விளையாட்டுப்போட்டி
காட்டூர், ராமநாதபுரம், புளியகுளம், மா.நா.க.,வீதி போன்றவற்றில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன.