ஏன் என்னாச்சு?.. மகனின் அரசியலுக்கு திடீரென முட்டுக்கட்டை போடும் வைகோ.. பரபரப்பு பேட்டி!
கோவில்பட்டி: தமிழக அரசியல் தலைவர்கள் என்று கூறினாலே நிச்சயம் முதல் 5 இடங்களுக்குள் வந்து விடுவார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. கருணாநிதி, அண்ணா காலம் தொடங்கி இன்றைய இளையதலைமுறை அரசியல்வாதிகள் வரை ஒன்றாக பயணித்து வருபவர்.
அரசியலில் வெற்றி, தோல்வி என அனைத்தையும் கடந்து வந்த வைகோவின் மேடை பேச்சை யாரும் ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக முன்பை போல் வைகோவால் இப்போது கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவோ முடிவதில்லை.

தொண்டர்கள் தீவிர ஆர்வம்
இதனால் வைகோவின் மகனான துரை வைகோவை களத்தில் இறக்க கட்சி தொண்டர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். துரை வைகோ நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் கட்சி பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்று வாக்குச் சேகரித்தார். அவரை முழு நேர அரசியலில் கொண்டு வர தொண்டர்கள் ஆர்வமாக இருக்க, என் மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறி இருக்கிறார்.

நான் விரும்பவில்லை
சங்கரன் கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வைகோ இது தொடர்பாக கூறியதாவது:- என் மகன் அரசியலுக்கு வருவது 20-ம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரியும். ஆனால் என் மகன் அரசியலுக்கு நான் விரும்பவில்லை. அரசியலில் 56 ஆண்டு காலம் மிகவும் கஷ்டப்பட்டிருகிறேன்.

வாழ்க்கையை அழித்திருக்கிறேன்
28 ஆண்டுகாலம் லட்சக்கணக்கான கி.மீ பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான கி.மீ. நடைபயணம் மேற்கொண்டிருக்கிறேன், நூற்றுக்கணக்கான போராட்டங்கள், ஐந்தரை ஆண்டு காலம் ஜெயில் வாழ்க்கை என்று அரசியலில் என் வாழ்க்கையை அழித்திருக்கிறேன். அரசியல் என்னோடு போகட்டும். என் மகன் வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை.

இது கோரப்படுகொலை
எனவே அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர் அரசியலுக்கு வருவதை 20-ம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கட்சிக் குழு கூட்டம் முடிவு செய்யும் என்று வைகோ தெரிவித்தார். இதனை தொடர்ந்து மேலும் கூறிய அவர், 'உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை ஈவு இரக்கமற்ற கோரப்படுகொலை. தாலிபான்கள் செயல்பாடுகளை போல் இங்கு செய்து உள்ளனர். இதற்கு மன்னிப்பே கிடையாது . நீதிமன்றத்தை கூட அவர்கள் மதிக்கவில்லை' என்றார்.












Click it and Unblock the Notifications