மெடிக்கல் காலேஜ் சீட் மோசடி: எஸ்ஆர்எம் தலைவர் பச்சமுத்துவுக்கு செப்.9 வரை சிறை- நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மருத்துவ கல்லூரியில் இடம்தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்துவை செப்.9 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
102 மாணவர்களிடம் மருத்துவ கல்லூரியில் இடம்தருவதாக கூறி ரூ.72 கோடி மோசடி செய்தார் பச்சமுத்து என்பது வழக்கு. இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த பச்சமுத்துவை இன்று பிற்பகல் போலீசார் கைது செய்தனர்.
தாம் கைது செய்யப்பட்ட உடனே தமக்கு உடல்நிலை சரியில்லை என போலீசிடம் பச்சமுத்து கூறினார். இதனால் அவர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் பச்சமுத்துவை ஏற்றிக் கொண்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீஸ் வாகனம் சென்றது.
மருத்துவ பரிசோதனைகள் முடிந்து மாலை 6.30 மணிக்கு சைதாப்பேட்டை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்பு பச்சமுத்துவை போலீசார் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், பச்சமுத்துவை செப்டம்பர் 9ம் தேதி வரை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். முன்னதாக பச்சமுத்துவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கக் கோரி அவரின் வழக்கறிஞர் அன்பழகன் கோரிக்கை விடுத்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்