35 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பரபரப்பு வெளிச்சத்தில் மீனாட்சிபுரம்!
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் சொந்த ஊரான மீனாட்சிபுரம் கிராமம், 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாடு முழுவதும் பேசப்படும் கிராமமாக மாறி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் கிராமம் கிராமத்தில் 300 குடும்பங்களே வசித்து வருகின்றனர். தீண்டாமை, மேல் வர்க்கத்தின் அடக்குமுறை காரணங்களால் மறைந்த எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் 1981 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் உள்ள 210 குடும்பத்தினர் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். ஒட்டு மொத்த மதமாற்றம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நாளிதழ்களில் தலைப்புச் செய்தியானது. பாஜக தேசிய தலைவராக இருந்த வாஜ்பாய் உள்ளிட்டோர்கள் நேரிடையாக இக்கிராமத்திற்கு வந்து மக்களை சந்தித்து பேசினர்.
சுவாதி கொலை செய்யப்பட்டதை அடுத்து கொலையாளி ராம்குமார் இரு தினங்களுக்கு கைது செய்யப்பட்டதை அடுத்து தற்போது, 35ஆண்டுகளுக்கு பிறகு சுவாதி கொலை வழக்கால் இக்கிராமம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மீனாட்சிபுரம்
திருநெல்வேலி மாவட்டத்தின், மேற்கு கரையோரம் அமைந்துள்ள சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தேன்பொத்தை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மதமாற்றம்
தீண்டாமை, மேல் வர்க்கத்தினரின் அடக்குமுறை போன்ற காரணங்களால் 1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி பல குடும்பங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறின. நாடு முழுவதும் இந்த விவகாரம் எதிரொலித்தது.
ரஹ்மத் நகராக மாற்றம்
அரசு ஆவணங்களிலும், இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு மீனாட்சிபுரம் என்பதுதான் பெயர். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். இங்கு பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர்.
உயர்ந்த வாழ்க்கைத்தரம்
மேல் வர்க்கத்தினரின் அடக்குமுறை காரணமாக ஒட்டுமொத்தமாக மதம் மாறினேம். மதம் மாறிய பிறகு எங்களது மரியாதை உயர்ந்துள்ளது என்கிறார் இந்த கிராமத்தைச் சேர்ந்த மதம் மாறிய சுலைமான். எங்களது வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது. பலர் வெளிநாடுகளுக்கு சென்று நல்ல வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
கொலையால் அவமானம்
மதமாற்றம் சம்பவத்தால் பிரபலமான எங்கள் கிராமம், தற்போது சுவாதி கொலையால் இந்தியா முழுவதும் பேசப்படுவது மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ராம்குமார் செய்த இச்செயலால் எங்களுக்கு மிகுந்த அவமானம் நேர்ந்துவிட்டது என்கின்றனர் கிராம மக்கள்.
வேதனையாக விசயம்
35 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் கிராமம் மீண்டும் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. ஒரு கொலை மூலம் ராம்குமார் எங்கள் கிராமத்தை நாடு முழுவதும் பேச வைத்துள்ளார். இது எங்களுக்கு வேதனையைத் தருகிறது என்று அந்த கிராமத்தினர். கூறுகின்றனர்