அம்மா உணவகத்தில் இட்லி சுட, சப்பாத்தி போட மீத்தேன் கேஸ்... இது கோவையில்!
கோவை: காய்கறி கழிவுகளிலிருந்து கிடைக்கும் மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தி கோவையில் உள்ள அம்மா உணவகத்தில் சமையல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்திலேயே முதல் முறையாக கோவை அம்மா உணவகத்தில்தான் இந்த மீத்தேன் எரிவாயு சமையல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தை கோவை மாநகர மேயர் செ.ம. வேலுச்சாமி தொடங்கி வைத்தார்.
மாநகரங்களில் அம்மா
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மாநகராட்சிகளில் அம்மா உணவகம் என்று அழைக்கப்படும் மலிவு விலை உணவகங்கள் மக்களின் பலத்த வரவேற்புடன் செயல்பட்டு வருகிறது.
மலிவு விலையில் இட்லி, சப்பாத்தி, பொங்கல்
இந்த உணவகங்களில் மலிவு விலையில் இட்லி, பொங்கல், சப்பாத்தி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதால் தொழிலாளர்களுக்கு பெரும் உபயோகமாக உள்ளது.
காஸ் சிலிண்டர் சமையல்
இந்த உணவகங்களில் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தித்தான் சமையல் செய்து வருகின்றனர்.
கோவையில் மீத்தேன் வாயு
இந்த நிலையில் கோவையில் முதல் முறையாக மீத்தேன் எரிவாயுவைப் பயன்படுத்தி சமையல் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சரவணம்பட்டி சித்ரா நகரில்...
மாநகராட்சியின் 31வது வார்டு சரவணம்பட்டி சித்ரா நகரில் உள்ள அம்மா உணவகத்தில் இந்த மீத்தேன் எரிவாயு சமையல் அறிமுகமாகியுள்ளது. இதை மேயர் வே்லுச்சாமி தொடங்கி வைத்தார்.
காய்கறிக் கழிவுகளிலிருந்து
காய்கறிக் கழிவுகளிலிருந்து இந்த மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்பட்டு சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு நாளைக்கு 200 கிலோ கழிவுகள்
சரவணம்பட்டி சுற்றுப் பகுதியில் உள்ள உணவு விடுதிகள், காய்கறி அங்காடிகளிலிருந்து பெறப்படும் காய்கறிக் கழிவுகள் நாள்தோறும் 200 கிலோ அளவிற்கு சேகரிக்கப்பட்டு, 25 கன மீட்டர் கொள்ளளவு உள்ள மீத்தேன் எரிவாயு உற்பத்தி கலனில் நிரப்பப்படும்.
ஒரு நாளைக்கு ரூ. 1500 மிச்சம்
இந்த மீத்தேன் வாயு மூலம், வழக்கமான கேஸ் சிலிண்டருக்கு செலவிடப்படும் பணத்தில் ஒரு நாளைக்கு ரூ. 1500 வீதம், மாதத்திற்கு ரூ. 45,000 சேமிக்க முடியுமாம்.
தமிழகத்திலேயே முதல் முறையாக
தமிழகத்திலேயே முதல் முறையாக இங்குதான் இந்த மீத்தேன் எரிவாயுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள இதர அம்மா உணவகங்களிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக செ.ம. வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
சபாஷ்.... பாராட்டுக்குரிய அறிமுகம்தான்.