அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமியுடன் பொறுப்பு ஆளுநர் திடீர் ஆலோசனை
சென்னை: தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இன்று மதியம் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அவர் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு திரும்பிய நிலையில், மாலை 6 மணியளவில், ஆளுநர் மாளிகைக்கு, மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கார்களில் வருகை தந்தனர். அபப்போது ராமமோகன ராவும் உடனிருந்தார்.
ஆளுநர் மாளிகைக்குள் இந்த ஆலோசனை சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என அப்பல்லோ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்கலாமா என்பது குறித்து இந்த ஆலோசனை நடைபெற்றிருக்கலாம் அல்லது துணை முதல்வர் பதவியை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றிருக்கலாம் என கருதப்பட்டது. இருப்பினும் அது கடைசியில் புஸ் ஆகி விட்டது.
ஆளுநர் மாளிகைக்கு ஒரே காரில் வந்து திரும்பிய அமைச்சர்கள் இருவரும், செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்துவிட்டனர். ஆளுநரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி ஓய்ந்து போனது.