வேடசந்தூரில் வேன் - மினி லாரி மோதி விபத்து.. 4 பேர் பலி.. மீட்புப் பணியில் குதித்த அதிமுக எம்.எல்.ஏ
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டியில் இன்று காலை தனியார் நூற்பு ஆலை பணியாளர்களை ஏற்றி சென்ற வேனும், டாடா ஏஸ் வாகனமும் மோதிக்கொண்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
திண்டுக்கல் அருகில் உள்ள வடமதுரை பெத்தப்பட்டியை சேர்ந்தவர்கள் காமராஜ் , பாண்டி. இவர்கள் இருவரும் மாட்டு தரகர்கள் ஆவர். மாடுகளை விவசாயிகளிடம் இருந்து வாங்கி அதனை மற்றவருக்கு விற்று வந்தனர்.
கொம்பேறிபட்டியை சேர்ந்தவர் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான பசு மற்றும் கன்றை விற்பதற்காக ஒரு மினி வேனில் ஏற்றிக்கொண்டு வடமதுரை-திண்டுக்கல் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். வேனை கொம்பேறிபட்டியை சேர்ந்த பொன்னாநாயக்கர் மகன் மயில்சாமி என்பவர் ஓட்டிவந்தார்.
அப்போது வடமதுரை அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லுக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் வந்துகொண்டிருந்தது. பஸ்சை மணப்பாறையை சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் ஆண்கள் மற்றும் பெண்கள் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர்.
பஸ்சை டிரைவர் தர்மராஜ் செல்போன் பேசிக்கொண்டே ஓட்டி வந்தார். இந்தபஸ் தென்னம்பட்டி அருகே காலை 6.45 மணிக்கு எதிரே மாடுகளை ஏற்றிக்கொண்டு வந்த மினி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி வேனில் வந்த மாட்டு வியாபாரிகள் பாண்டி, காமராஜ், டிரைவர் மயில்சாமி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
மேலும் வேனில் ஏற்றி வந்த பசு மாடு கன்றுக்குட்டியுடன் பலியானது. பயங்கர வேகத்தில் பஸ் மோதியதால் வேன் முழுவம் சுக்குநூறாக நொறுங்கியது. அதிக வேகத்தில் மோதிய பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மின் கம்பத்தின்மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதனால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் உயிர் பயத்தில் கூச்சலிட்டனர். அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஓடிவந்து அவர்களை மீட்டனர்.
சம்பவம் குறித்து கேள்விபட்டதும் வேடசந்தூர் டி.எஸ்.பி. மோகன் குமார் தலைமையில் வடமதுரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.
மேலும் விபத்து நடந்த பகுதி வேடசந்தூர் அதிமுக எம்.எல்.ஏ பழனிச்சாமியின் சொந்த கிராமம் என்பதால் சம்பவம் குறித்து கேள்விபட்டதும் அவர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் மினி வேனில் வந்த விவசாயி சின்னசாமியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் நடந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.