சென்னை வருகிறார் பொறுப்பு ஆளுநர்.. சந்திக்கிறார் ஸ்டாலின்.. டிஸ்மிஸ் கோரிக்கை?
கூவத்தூர் பண விவகாரத்தில் சிக்கியுள்ள அதிமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து அவரிடம் கோரிக்கை விடுப்பார் என்று தெரிகிறது.
சென்னை: கூவத்தூரில் பண பேரம் நடந்து தொடர்பாக கிடைத்துள்ள வீடியோ ஆதாரத்தை இன்று ஆளுநரை சந்திக்கும்போது முக ஸ்டாலின் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மறைந்த பிறகு, முதல்வராக பொறுப்பேற்ற பன்னீர் செல்வத்தை சசிகலா தனது பதவி வெறியால் ராஜினாமா செய்ய வைத்தார். இதைத் தொடர்ந்து சசிகலாவின் தலைமையை பிடிக்காமல் 11 எம்எல்ஏ-க்கள் ஓபிஎஸ் பக்கம் வந்தனர். மீதமுள்ள 122 எம்எல்ஏ-க்களை ஓபிஎஸ் அணியோ அல்லது எதிர்க்கட்சியோ விலைக்கு வாங்கக் கூடும் என்ற அச்சம் எழுந்தது.
இதன் காரணமாக எம்எல்ஏ-க்களை , ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் வரை கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைத்தார் சசிகலா. இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்தார். அதில் எடப்பாடி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
தனியார் நிறுவனம் நடத்திய...
இந்நிலையில் அதிமுக அரசு பாஜகவின் கைக்கூலி என்று பல்வேறு விமர்சனங்களை அதிமுக பெற்றது. அதன் இரு எம்எல்ஏ-க்களான சரவணன், கனகராஜ் ஆகியோருக்கு தெரியாமல் அவர்கள் செய்த மோசடி குறித்து தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது.
வீடியோவில் என்ன?
அதில் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் பேரம் பேசியது குறித்து இடம்பெற்றிருந்தது. இது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே தமிழகத்தில் சட்டசபை கடந்த 14-ஆம் தேதி கூடியது. கூவத்தூர் பேரம் குறித்து விவாதிக்க முக ஸ்டாலின் அனுமதி கோரினார். அதற்கு ஆதாரம் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் சட்டசபையில் விவாதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.
ஆதாரத்துடன் வந்த ஸ்டாலின்
இதனால் நேற்று சட்டசபையில் வீடியோ ஆதாரத்துடன் வருகை தந்த ஸ்டாலின், கூவத்தூர் பேரம் குறித்து விவாதிக்க கோரியும் சபாநாயகர் மறுத்துவிட்டார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார்.
இன்று மாலை சந்திப்பு
அவரை இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். அப்போது கூவத்தூர் பேரம் குறித்து வீடியோ ஆதாரங்களை ஆளுநரிடம் ஒப்படைத்துவிட்டு ஆட்சியை கலைக்குமாறு கோரிக்கை விடுவார் என்று தெரிகிறது.