தொடர் உண்ணாவிரதம்.. பார்வையற்ற பட்டதாரிகள் மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் ஆறுதல்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற தேவையான மதிப்பெண்ணை குறைப்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் பார்வையற்ற பட்டதாரிகளை திமுக பொருளாளர் ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற தேவையான மதிப்பெண்ணை 40 ஆக குறைக்கவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பார்வையற்ற பட்டதாரி சங்கத்தினர் சென்னையில் கடந்த 11 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிற மாவட்டங்களிலும் பார்வையற்றோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் 9 பேர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தொடர் உண்ணாவிரதத்தால் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருவதால் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் நேற்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று 9 பார்வையற்ற பட்டதாரிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். நீங்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு விட்டு வேறு வழியில் போராட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி விரும்புகிறார் என்று ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்தார்.
தொடர் போராட்டம் நடத்தி வரும் பார்வையற்ற பட்டதாரிகளை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசாதது கவலை அளிப்பதாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
சீமான் அறிக்கை:
பார்வையற்ற பட்டதாரிகளின் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் தனித்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் 11 நாட்களாக போராடி வருகின்றனர். இவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடாகும்.
தங்களுடைய கோரிக்கைகளை விளக்கி எடுத்துரைக்கவே, அவர்கள் முதலமைச்சரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரி போராடிவருகின்றனர். தங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள் முறையாக தரப்படவில்லை என்பதனாலேயே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் போராட்ட நோக்கத்தை ஊடகங்களின் வழியாக தெளிவாக விளக்கியும் உள்ளனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் மீது இதுவரை தமிழக அரசு எந்த விளக்கமும் அளிக்காதது மட்டுமின்றி, அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வருத்தமளிக்கிறது.
இது நியாயமல்ல. போராடுவது ஒரு ஜனநாயக உரிமை. அவர்கள் அனுமதி பெறாமல் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம், அவர்களின் உணர்வுகளை அரசு மதிக்காததும், அவர்களுக்கு உரிய பதிலை தராததுமேயாகும். போராடும் அவர்களுக்குத்தான் பார்வையில்லை, அரசுமா பார்வையற்றதாக நடந்துகொள்ள வேண்டும்? அவர்களுக்காக அரசு கனிவாக நடந்து கொண்டால் என்ன? 10 நிமிடம் ஒதுக்கி அவர்களை தமிழக முதல்வர் சந்தித்தால் பிரச்சனை தீர வழி பிறக்கப் போகிறது. எனவே மேலும் அவர்களை போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடச் செய்யும் அளவிற்கு அரசு நடந்து கொள்ளக் கூடாது. அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு தனது நிலையையாவது அரசு விளக்கி அறிக்கை தர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.