ஆளுநர் சட்டசபையை கூட்டினால் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் - ஸ்டாலின்
சட்டசபையை ஆளுநர் கூட்ட வேண்டும், அதன்பிறகு திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. அவர் பேரவையை கூட்டினால் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கடிதம் அளித்துவிட்டு சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து, ஏற்கனவே 2 முறை திமுக சார்பில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்பது கோரிக்கை. ஒருவாரம் கெடு அளித்தார் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின்.
திமுக வழக்கு
ஆளுநர் இன்னும் இதில் முடிவை எடுக்கவில்லை. இந்த நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஹைகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
நிரூபிக்கட்டும்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,ஆளுநரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வழக்கு தொடர்ந்ததாக கூறினார். ஜனநாயக ரீதியாக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.
அதிகாரம் ஆளுநருக்கே
சட்டசபையை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. ஆளுநரை பேரவையை கூட்டினால் திமுக நிச்சயமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும்.
கொல்லைப்புற ஆட்சி
கருணாநிதியின் கொள்கை, திமுகவின் கொள்கை எல்லாமே ஒன்றுதான். நாங்கள் ஒருபோதும் கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வர விரும்பமாட்டோம். அதில் என்றைக்குமே உறுதியாக இருக்கிறோம்.
பெரும்பான்மையை நிரூபிக்கட்டும்
முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும். அதன்பிறகு என்னை விமர்சனம் செய்யட்டும் என்று கூறிய ஸ்டாலின், தினகரன் ஒரு விளம்பர பிரியர் என்று கூறினார்.