மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- ஸ்டாலின் வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் , நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபை இன்று தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.
அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்க வாய்ப்பில்லை என மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்டார்.
பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தின் பிரச்னையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதுபோல, நம்முடைய மாநிலத்தின் பிரச்சினை தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என நாம் பல முயற்சிகளில் ஈடுபட்டும் எதற்கும் பயனில்லை. தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.
ஆகவே, அதிமுக அரசு, அங்கேயிருக்கின்ற உங்களுடைய எம்பிக்கள் மூலமாக கொண்டு வந்து, ஒரு அழுத்தம் தர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
6வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் சட்டசபையில் பேசினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், சட்டசபையில் திமுக கொடுக்கும் அழுத்தத்தைவிட நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வரும் 29ஆம் தேதி வரை காலக்கெடு உள்ளதாகவும், அதற்குப் பின் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கலாம் என்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.