எங்க ஊருக்குத்தான் எய்ம்ஸ்.. இல்லாவிட்டால் ராஜினாமா.. ரணகளம் கிளப்பும் மதுரை அதிமுக எம்எல்ஏக்கள்!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் ராஜினாமா செய்வோம் என்று அதிமுக எம்எல்ஏக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை : மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்தே தீர வேண்டும் இல்லாவிடில், மதுரையை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்வோம் என்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் தெரிவித்துள்ளார்.
தென்மாவட்ட மக்களின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்ய மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் தென் மாவட்ட மக்களின் தேவையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று தெரிவித்திருந்தார். மேலும் மதுரையில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த கோரிக்கையில் மத்திய அரசுக்க அழுத்தம் கொடுக்கும வகையில் தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அதிமுகவின் மதுரை மாவட்ட எம்எல்ஏக்கள் 8 பேர் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் என அனைவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்யத் தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூரில் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடியின் முடிவிற்கு எதிராக தினகரன் ஆதரவு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்எல்ஏ போஸ் மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துமனை அமைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.