அதிமுக அரசுக்கு உறுதுணையாக இருப்போம்.. தமிமுன் அன்சாரி
கோவை: அதிமுக அரசுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவோம். மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போம். முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுப்போம். தண்டனைக்காலம் முடிந்தும் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம். அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
மனித நேய மக்கள் கட்சி, சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பிரிந்தது. அதிலிருந்து பிரிந்து வந்த தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயகக் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இரட்டை இலை சின்னத்தில் நாகப்பட்டனம், கடையநல்லூர் தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் நாகையில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி மட்டும் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 2 இடங்களில் போட்டியிட்டது. இதில் நாகை தொகுதியில் வெற்றி பெற்றோம்.
கட்சி தொடங்கிய குறுகிய நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்து வெற்றி பெற்றுள்ளோம். அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றவுடன் 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இதற்கு பொது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது.
அதிமுக ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்போம். மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்போம். முஸ்லிம்களை முன்னிறுத்தி எல்லா மதங்களுக்கும் பொதுவான கட்சியாக மனிதநேய ஜனநாயக கட்சி விளங்கும். முஸ்லிம்களுக்கான 3:1 இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற குரல் கொடுப்போம். தண்டனை காலம் முடிந்து சிறையில் இருப்பவர்களை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அன்சாரி.