திமுக- காங். கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு: குலாம்நபி ஆசாத்
சென்னை: திமுக- காங். கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கருணாநிதியை சந்தித்த பின்னர் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை குலாம்நபி ஆசாத் இன்று சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:
கருணாநிதியுடனான இன்றைய சந்திப்பின் போது தேர்தல் வியூகம், தொகுதி பங்கீடு குறித்து பேசினோம். திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆகையால் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு முடிவடைய இன்னும் சிறிது காலம் ஆகும். இது தொடர்பாக தொடர்ந்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.