இடிந்த கட்டடத்திற்குள் சிக்கியிருப்பது 120 பேர்?
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த இடத்திலிருந்து இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கட்டடத்திற்குள் கிட்டத்தட்ட 120 பேர் சிக்கியிருப்பதாக உயிருடன் மீண்டவர்கள் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை வரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. தற்போது மேலும் ஐவரின் உடல்கள் கிடைத்துள்ளன.
20க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பதில் தெளிவான தகவல் இல்லை. இருப்பினும் தொடர்ந்து இரவு பகலாக மீட்பு முயற்சிகள் நடந்து வருகின்றன.

120 பேர் சிக்கியிருப்பதாக தகவல்
இந்த நிலையில் மீட்டு வெளியே கொண்டுவரப்பட்ட சிலர் உள்ளே 120க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான்கு மாடிகள் தரைக்குள்
விபத்தில் சிக்கிய கட்டடம் மொத்தம் 11 மாடிகளைக் கொண்டதாகும். இதில் கார் பார்க்கிங், தரைத் தளம், முதல் மாடி என முதல் நான்கு மாடிகள் அப்படியே தரைக்குள் போயுள்ளது. மற்ற மாடிகள் இடிந்து தரை மட்டமாகி விட்டன.

எத்தனை பேர் இருந்தார்கள்
அங்கு விபத்து நடந்தபோது எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால் 120 பேருக்கும் மேல் இருந்ததாக மீட்கப்பட்ட சிலர் கூறியுள்ளனர்.

தொடர் மழை -மீட்பு முயற்சிகளில் தொய்வு
இடைவிடாமல் நடந்து வரும் மீட்பு முயற்சிகளுக்குப் பெரிய அளவில் இதுவரை பலன் கிடைக்கவில்லை. மிக மிக மெதுவாகவே இதுவரை உயிருடன் சிலர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாகவும் மீட்பு முயற்சிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்
இதுவரை விபத்து நடந்த இடத்திலிருந்து 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணியில் சிரமம்
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூறுகையில், 4 தளங்கள் பூமிக்குள் புதைந்து காணப்படுகிறது. மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் மீட்பு பணி நடைபெற்றால் தான் இடிபாடுகளை அகற்ற முடியும். இருந்த போதிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

கவலையுடன் உறவினர்கள்
மீட்புப் பணிகள் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் இங்கு கட்டுமானத் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தவர்களின் உறவினர்கள், மதுரை, சேலம், ஆந்திரா, பீகார், ஒடிஷா ஆகிய பகுதிகளிலிருந்து வந்து குவிந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே கவலையுடன் காத்துக் கிடக்கின்றனர்.












Click it and Unblock the Notifications