அவசரப்பட்டுட்டோமோ... அணி தாவிய நவநீதகிருஷ்ணன் அண்ட் கோவின் மைன்ட் வாய்ஸ்!
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி. தினகரன் முன்னிலை பெற்று வருவதையடுத்து அவர் அணியில் இருந்து முதல்வர் அணிக்குத் தாவிய எம்எல்ஏ, எம்பிகள் கலக்கத்தில் உள்ளனர்.
Recommended Video
சென்னை : இரட்டைஇலை சின்னத்தை பெற்றதால் எம்பிகள் நவநீதிகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோர் முதல்வர் பழனிசாமி அணிக்கு தாவினர். அணிதாவிய எம்பி, எம்எஏக்கள் ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் முன்னேறி வருவதைப் பார்த்து கலக்கத்தில் உள்ளனர்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த போது செல்வாக்கு படைத்தவராக வலம் வந்த டிடிவி. தினகரனை கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கத் தொடங்கினார் முதல்வர் பழனிசாமி. தினகரனை ஒதுக்கி வைக்க ஒதுக்கி வைக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் நெருக்கம் அதிகரித்தது.
ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு நடந்தது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தினகரன் கட்சி நிர்வாகிகளை மாற்றி வெளியிட்ட அறிவிப்புகள் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கைகுலுக்கிய ஓபிஎஸ், ஈபிஎஸ்
இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அதிமுக விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. பொதுக்குழு தீர்மானத்தை சுட்டிக்காட்டியே தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் வாங்கி வந்தது ஓ.பிஎஸ், ஈபிஎஸ் அணி.
தீராத பிரச்னை
இதோடு பிரச்னை தீர்ந்துவிட்டது, இனி தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று சொல்லத் தொடங்கினர் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர். மேலும் தினகரன் அதுவரை பயன்படுத்தி வந்த அதிமுக அம்மா அணி என்ற பெயரையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அணி தாவிய எம்எல்ஏ ஜக்கையன்
இதனால் தினகரனுக்கு இனி தோல்வி முகம் தான் என்று அவர் அணியில் இருந்த சிலர் முதல்வர் அணிக்கு மாறினர். 19 எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிசாமி மீது அதிருப்தி தெரிவித்த நிலையில் கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் திடீரென அணி தாவினார்.
சின்னம் போனதால் அணி மாறிய எம்பிகள்
இதே போன்று சின்னம் முதல்வர் அணிக்கு கிடைத்ததும்,எம்பிகள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் அணி தாவினர். தகுதி நீக்கம் செய்யப்படுவிடுவோமா என்று தான் அணி மாறியதாகவும், சின்னம் கிடைத்தவுடன் மீண்டும் தினகரன் அணிக்கே வந்துவிடுதாக சொல்லி விட்டு சென்றதாகவும் தினகரன் கூறினார்.
அணி தாவியவர்கள் கலக்கம்
இந்நிலையில் தினகரன் ஆர்கே நகர் தொகுதியில் சின்னம், கட்சியின் பெயர் எதுவுமே இல்லாமல் தினகரன் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இதனால் அவசரப்பட்டு அணி மாறி விட்டோமோ என்ற கலக்கத்தில் உள்ளனர் அணி தாவியவர்கள்.