மதுரையில் ரூ. 4.75 கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை: ஜெயலலிதா
மதுரை: மதுரையில் காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 4.75 கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 77 துறைகளைக் கொண்டு சிறப்புடன் இயங்கி வருகிறது. சுமார் 1.20 லட்சம் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்கள். இப்பல்கலைக்கழகத்தில் நலவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தினை பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடிய ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை 4 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
மேலும், மாணாக்கர்கள் நலனை கருத்தில் கொண்டு, விளையாட்டு உள்அரங்கம் மற்றும் நூலகம் ஆகியவை 6 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
சூரிய மின்ஒளி மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம், கம்பியில்லா தொடர்பு வசதி ஆகிய வசதிகள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தித் தரப்படும். இதைத் தவிர, விடுதிகள் மேம்பாட்டு பணிகள் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
மேலும் ஆலைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை பரிசோதிக்க தர சோதனை மையம் மதுரையில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை செல்லூரில் ரூ.1.84 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மதுரையில் அமையவுள்ள இந்த எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா, மதுரையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications