தமிழக வகுப்பறைகளில்.... கொலைகளும், சட்டவிரோத செயல்களும் தலைவிரித்தாடும் அவலம்!
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாதாரண நோட்டுப் புத்தகத்தை கிழித்ததற்காக சக மாணவனைக் கொன்று கைதாகியுள்ளார் ஒரு பிளஸ் ஒன் மாணவர். அனைவரையும் இது அதிர வைத்துள்ளது.
மாணவ சமுதாயத்தினர் இப்படி கொலைக்களமாக வகுப்புகளை மாற்றுவது இது முதல் முறையல்ல. ஆனால், இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்வதுதான் அதிர்ச்சி தருவதாக உள்ளது.
முன்பெல்லாம் பள்ளிக்கூடங்கள் கோவில் போலவும், வகுப்பறைகள் கர்ப்பக்கிரகங்கள் போலவும், ஆசிரியர்கள் தெய்வங்கள் போலவும் கருதப்பட்டனர். அந்தக் காலம் இன்று மலையேறி விட்டது. கொலை, அடிதடி, சாதி ரீதியிலான மோதல், மது அருந்து, கஞ்சா அடிப்பது, புகைப்பது, ஆசிரியைகளை கேலி செய்வது, மாணவிகளை கேலி செய்வது என்று வன்மக் களமாக பள்ளிக்கூடங்கள் பல மாறி நிற்கின்றன.
டேபிளை விற்று மது அருந்திய மாணவர்கள்
மதுரை அருகே சில வருடங்களுக்கு முன்பு மது குடிக்க கையில் காசு இல்லாததால், வகுப்பில் இருந்த டேபிளையே தூக்கிச் சென்று விற்று மது அருந்திய மூன்று மாணவர்களால் பெரும் அதிர்ச்சி அலையில் மூழ்கினர் பெற்றோர்.
சாதி மோதல்கள்
அதேபோல பல அரசுப் பள்ளிகளில் இன்றும் கூட சாதி ரீதியிலான பிரிவினையும், மோதலும் தலைவிரித்தாடி வருவதை காணலாம். சமீபத்தில் கூட விருதுநகர் அருகே தலித் மாணவர் ஒருவர் கைக்கடிகாரம் கட்டி வந்ததைத் தட்டிக் கேட்டு சில மாணவர்கள் மோதினர். இதில் அந்த தலித் மாணவனின் மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட கோரமும் நடந்தேறியது.
ஆசிரியையைக் கொன்ற மாணவன்
இதேபோல கடந்த 2012ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் என்ற தனியார் பள்ளியில் ஆசிரியை உமா மகேஸ்வரி என்பவர் 9ம் வகுப்பு மாணவர் ஒருவரால் வகுப்பறையிலேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் இன்று வரை யாராலும் மறக்க முடியாத வடுவாக மாறிப் போயுள்ளது.
குளிர்பானத்தில் மது அருந்திய மாணவன்
சென்னை பூந்தமல்லியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சசிக்குமார் என்ற பிளஸ்டூ மாணவன், பெப்சி பாட்டிலில் மதுவை ஊற்றிக் கொண்டு வந்து ஆசிரியை வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது குடித்த செயல் அனைவரையும் அதிர வைத்தது.
இன்னும் இன்னும்
இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபடிதான் உள்ளது. பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில்தான் இத்தகைய செயல்கள் அதிகம் உள்ளன. இதற்கான சரியான காரணத்தை இதுவரை அரசுத் தரப்பில் கண்டறிந்ததாகவே தெரியவில்லை.
மாணவர்களை சீரமைக்க கடும் நடவடிக்கை தேவை
மாணவர்களை, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே ஒழுங்கீனச் செயல்கள் அதிகமாக இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் இதுபோன்ற கொலைகளும், பிற சட்டவிரோத செயல்களும் அதிகரிப்பதை அரசே நினைத்தாலும் தடுக்க முடியாத அளவுக்கு நிலைமை கை மீறிப் போய் விடும் அபாயம் உள்ளது.