திருவள்ளூரில் திரும்பிய பக்கமெல்லாம் மர்மக் காய்ச்சல்.. தொடரும் பலி.. பீதியில் மக்கள்!
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மர்மக் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக முகாமிட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதால் பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பல்வேறு மருத்துவக் குழுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி, ஈக்காடு ஆகிய தாலுகாக்களில் மர்மக் காய்ச்சல் பரவியுள்ளது.
ஆகஸ்ட் மாதத் தொடகத்தில் இந்த மர்மக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. இதுவரை 4 பேர் இதற்குப் பலியாகியுள்ளனர். பலர் பாதிப்படைந்து திருவள்ளூர், சென்னை அரசு பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மர்மக் காய்ச்சல் என்ன மாதிரியான காய்ச்சல் என்று அரசுத் தரப்பு இதுவரை விளக்கவில்லை. அதேசமயம், காய்ச்சலை குறைக்க தீவிர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அனைத்து தாலுகாக்களிலும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ப்ளீச்சிங் பவுடர் அடிப்பது, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை அடையாளம் கண்டறிந்து அந்த இடத்தில் கொசுக்கள் அதிகரிக்காத வகையில் நடவடிக்கைகளை எடுப்பது என பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுவரை மர்மக் காய்ச்சலுக்கு 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் 20ம் தேதி இரு சிறார்கள் உயிரிழந்தனர். அடுத்து ஆகஸ்ட் 26ம் தேதி 10 வயது சிறுமி உயிரிழந்தார். 27ம் தேதி 15 வயது சிறுவன் இறந்தான்.
மர்மக் காய்ச்சல் குறையாமல் தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். கொசுக்கள் மூலமாகவே இது பரவுவதால் வீடுகளில் கொசுக்கள் கடிப்பதிலிருந்து தப்பிக்க பல்வேறு நடவடிக்கைகளை மக்களும் முடுக்க விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications