சமூகவிரோதிகள் பற்றி தெரிந்திருந்தும் போலீசிடம் ரஜினி தெரிவிக்காதது குற்றம்- நாம் தமிழர் கட்சி புகார்
சமூகவிரோதிகள் பற்றி தெரிந்திருந்தும் போலீசிடம் ரஜினி தெரிவிக்காதது குற்றம் என்று நாம் தமிழர் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : சமூக விரோதிகள் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தும் காவல்துறையிடம் ரஜினி தெரிவிக்காதது குற்றம் என்று நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதிப்படைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்ற ரஜினிகாந்த், போராட்டத்தில் சமூக விரோதிகள் வன்முறையைத் தூண்டியதே துப்பாக்கிச்சூட்டிற்குக் காரணம் என்று தெரிவித்து இருந்தார்.
அதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, எனக்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்று முன்கூட்டியே தெரியும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
13 பேர் பலி
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர் வெளியிட்டுள்ள குறிப்பில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 100 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 வது நாளான மே 22-ம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
சமூக விரோதிகள் காரணம்
இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள் மீதும் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 30-05-2018 அன்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் 'சமூக விரோதிகள் ஊடுருவலே இந்த வன்முறைக்கு காரணம் என்றும் 'சமூகவிரோதிகள் யார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?' என்று ஒரு நிருபர் கேள்விக்கேட்டதற்கு 'சமூக விரோதிகள் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்' என்றும் குறிப்பிட்டார்.
தன்னெழுச்சிப் போராட்டம்
மேலும் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தும் வகையிலும் எதற்கெடுத்தாலும் போராட்டங்கள் நடத்தினால் ஸ்டெர்லைட் ஆலை போன்ற தொழிற்சாலைகள் தொடங்க தமிழ்நாட்டிற்கு யாரும் வரமாட்டார்கள் அதனால் வேலைவாய்ப்பு பறிபோகும் என்றும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பாதிக்கப்பட்ட மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.
சென்னை டிஜிபி அலுவலகம்
அவரது கூற்றுப்படி தூத்துக்குடி வன்முறைக்கு காரணமானவர்கள் யார் என்றும் சமூகவிரோதிகள் ஊடுருவல் பற்றி
சம்பவம் நடைபெறுவதற்கு முன்கூட்டியே தெரிந்தும் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறையிடம் இதுபற்றி தெரிவிக்காதது சட்டப்படி குற்றமாகும். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குத் தொடர நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழுவினர் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.