நாங்களே மாற்று- நாம் தமிழரே மாற்று! 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி: சீமான்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில் சனிக்கிழமையன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பல்வேறு தலைப்புகளில் முனைவர் பால் நியூமன். பாவலர் தழல் தேன்மொழி. முனைவர் சுபாஷ்சந்திரா, முனைவர் ஒடிசா பாலு. ப.அருளியார், முனைவர் ஹாஜாக்கனி, முனைவர் கு.அரசேந்திரன், இயற்கைவேளாண் பேரறிஞர் பாமயன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு ஈழப் போரில் தன்னுயிர் ஈந்த தீபன், மணிவண்ணன்,விதுசா, துர்கா உள்ளிட்ட மாவீரர்களுக்கு மலர்வணக்கம், வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பின்னர் ‘வையத்தலைமை கொள்' எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு' என்பதை உலகுக்கு உணர்த்திய தலைவன் பிரபாகரன். நான்கைந்து மனைவி கட்டி, அவர்களுக்கு எல்லாம் பிள்ளை பெற்று, பெற்ற பிள்ளைகளுக்கு எல்லாம் பதவி பெற்றுக்கொடுத்து, அடித்த கொள்ளையில் வந்த பணத்தை பதுக்க, ஒதுக்க கடைசிவரை பதவியைத் தேடிய தலைவர்களுக்கு மத்தியில், தான் பெற்றெடுத்த பிள்ளைகளை களத்தில் பலிகொடுத்த தலைவர்தான், தலைவர் பிரபாகரன்.
இன்றைக்கு நாங்கள் பெரியாருக்கு எதிரி என்கிறார்கள். ‘எதனையும் சுயஅறிவோடு சிந்தித்து செயல்பாடு'என்றார் பெரியார். ஆனால், இன்றைய பெரியாரியவதிகளோ, ‘சொந்தப்புத்தி வேண்டாம்; பெரியார் தந்த புத்தி ஒன்றே போதும்' என்கிறார்கள்.
எல்லாவற்றிக்கும் ஆய்வுக்கு உட்படுத்து என்ற தந்தை பெரியாரை ஆய்வுக்கு உட்படுத்தவே தயங்குகிற இவர்கள் என்ன பெரியாரியவாதிகள்? 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் என்ன தத்துவ மாற்றம் இருக்கிறது?
இவர்களின் மொழிக்கொள்கையில் என்ன மாற்றம் இருக்கிறது? திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் மணல்கொள்ளை, கனிமவள கொள்ளை, கொலை, கொள்ளை, பசி, பஞ்சம், பட்டினி,வறுமை, ஏழ்மை. அதனால்தான், முடிவுக்கு வந்தோம்.
திமுகவுக்கு மாற்று அதிமுக இல்லை. அதிமுகவுக்கு மாற்று திமுக இல்லை. காங்கிரசுக்கு மாற்று பாஜக இல்லை. பாஜகவுக்கு மாற்று காங்கிரசு இல்லை. நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று!! அதனால்தான், வருகிற சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக இவற்றிற்கு மாற்றாக, தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவெடுத்து நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது.
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி என்பது தோற்பதற்கல்ல- தொடங்குவதற்கு!! அதற்கு முன்பாக வருகிற மே 24, திருச்சியில் இன எழுச்சி மாநாட்டை நாம் தமிழர் கட்சி நடத்துகிறது. தமிழர் தேசிய இனத்துக்கான நாள் என அதில் ஒவ்வொரு தமிழரும் பங்கேற்க வேண்டும்.
தமிழர் வையத்தலைமை கொள்வதற்கு முன்பாக தான் பிறந்த மண்ணை தலைமை கொள்ள வேண்டும்.
இவ்வாறு சீமான் பேசினார்.