தீவு போல காட்சியளிக்கும் நாகை கிராமங்கள்.. அத்தியாவசியப் பொருட்கள் வாங்க படகில் பயணம்!
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தலைஞாயிறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவே படகில் சென்று வரும் நிலை உருவாகியுள்ளது.
நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தலைஞாயிறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவே படகில் சென்று வரும் நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 27-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடக்கம் முதலே நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 8 நாட்களாக விடாமல் வெளுக்கும் மழையால் நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
மழையினால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல இடங்களில் வீடுகள் இடிந்து சேதம் அடிடதுள்ளன. தலைஞாயிறு அருகில் அமைந்துள்ள வண்டல் கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் இருந்து மக்கள் வெளியே சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்லமுடியாமல் வயல்வெளியில் மோட்டார் போட்டுகளை இயக்கி மக்கள் அத்தியாவசிகப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
நாகை: கடல்போல காட்சியளிக்கும் வயல்வெளி... வயல்வெளியில் படகு பயணம்...#மழைக்காலம் pic.twitter.com/qVgeMMQg95
— News18 TamilNadu (@News18TamilNadu) November 6, 2017
தண்ணீர் சூழ்ந்ததால் வண்டல் கிராமத்தில் வயல்வெளிகள் அனைத்தும் கடல்போல காட்சியளிக்கின்றன. முறையான வடிகால் வசதி ஏற்படுத்தாததே வயல்கள் மூழ்கியதற்கு காரணம் என்றும், தொடர்ந்து அரசுக்கு இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று அந்தப் பகுதியினர் கூறுகின்றனர். மேலும் ஆண்டுதோறும் பருவமழையின் போது இதே மாதிரியான அழிவுகளைத் தான் சந்திக்க நேரிடுவதாக மக்கள் கலவையுடன் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று காடம்பாடி, சாலமண்தோட்டம், நாகூர், நாகை வாய்க்காங்கார தெரு, கூக்ஸ்ரோடு, செல்லூர் சுனாமி குடியிருப்பு, பாலையூர், வேட்டைக்காரனிருப்பு, முதலியப்பன்கண்டி, பழையாற்றங்கரை, குண்டுரான்வெளி, உம்பளச்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து தீவு போல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க படகு மூலம் கடைதெருவுக்கு சென்று வருகின்றனர்.